ஸ்பெயின் தலைநகரான மேட்ரிட்-டில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள டோரெஜோன் டி ஆர்டோஸ் என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதிகாலையில் நடந்த திருமணத்தின் போது திடீரென அவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹோட்டலுக்கு வெளியே சாலையில் வந்து குழுவினர் சண்டை போட்டுக்கொண்டிருந்த நிலையில் திடீரென வேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் 70 வயது பெண் ஒருவரும், 40, 60 மற்றும் 17 வயதுடைய மூன்று ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். ” நாங்கள் நிகழ்விடத்துக்கு வந்த போது நான்கு பேர் உயிரிழந்திருந்தார்கள். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்திருந்தனர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்“ எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் மேட்ரிட் அவசரக்கால சேவைத்துறையின் தலைவர் கார்லோஸ் போலோ.
விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர்கள் எனக் கருதப்படும் நபர்களை நிகழ்விடத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் காவல்துறை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தந்தையும் அவரது இரண்டு மகன்களும் என மொத்தம் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.