2022 அக்டோபர் மாத நிலவரப்படி நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 30.88 கோடி என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. கடந்த 4-ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 71.84 % அதிகமாகும் . 2016-ம் ஆண்டில் அப்போதைய ரூபாய் நோட்டு புழக்கத்தில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களின் பங்கு சுமார் 86 % சதவிகிதமாக இருந்தது.
2016 வருடம் நவம்பர் மாதம் 4-ம் தேதி ஊழல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவித்தார் பிரதமர் மோடி. அப்போதே அரசின் இந்த நடவடிக்கை சரியாகத் திட்டமிடாத நடவடிக்கை எனப் பொருளாதார வல்லுநர்களால் விமர்சனத்துக்குள்ளானது. மேலும், இது பண நோட்டுக்களில்லா பொருளாதாரத்துக்கு இந்தியாவை மாற்றக்கூடும் எனவும் கூறப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக டீமானிட்டைசேஷன் நடவடிக்கை எடுக்கப்பட்டு பல வருடங்கள் கழிந்த பின்னரும் கூட மக்களிடையே ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரிக்கவே செய்திருக்கிறது.
2016-ம் ஆண்டுக்குப் பிறகு ரூ. 17.74 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சத்து விநியோகித்துள்ளது. கோவிட் 19 பரவலுக்குப் பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தன. இருந்தாலும் மக்கள் ரூபாய் நோட்டுக்களை இன்னும் விரும்பத்தான் செய்கிறார்கள் என்பதையே ரிசர்வ் வங்கியின் அறிக்கை காட்டுகிறது.