விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேவுள்ள அர்ச்சுனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். கடந்த மார்ச் மாதம் நடந்த தகராறில் இவரை, அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவர் வெட்டிக் கொலைசெய்தார். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பனின் மகன் ரஞ்சித்குமார், தன் தந்தையைக் கொன்ற முருகனை பழிக்குப்பழி வாங்கவேண்டும் எனச்சொல்லி அவரைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே முருகனை, போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக முருகன் கடந்த சில நாள்களுக்கு முன்பு முருகன் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு தனது குடும்பத்தினரை பார்ப்பதற்காக சொந்த ஊரான அர்ச்சுனாபுரத்துக்கு முருகன் வந்திருக்கிறார். இந்த தகவலை கேள்விப்பட்ட ரஞ்சித்குமார், முருகனை பழிக்குப்பழி வாங்க இதுதான் சரியான நேரம் எனக்கருதி அவரை கொலைசெய்ய நோட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சமயம், வத்திராயிருப்பு-அர்ச்சுனாபுரம் சாலையில் உள்ள வயல்வெளி வழியே முருகன் வந்துகொண்டிருப்பதை பார்த்த அவர், முருகனை இடைமறித்து கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலைசெய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர், வத்திராயிருப்பு காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் முருகனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்து கூட்டுச் சதியில் கொலை நடந்ததா? கொலையில் யார் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என சரணடைந்த ரஞ்சித்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கொலை சம்பவத்தில் ரஞ்சித்குமாரின் நண்பர்கள் உட்பட மேலும் 5 பேருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அதன்படி, முருகனைக் கொலைசெய்ய ரஞ்சித் குமாருக்கு உதவியதாக அதே ஊரைச் சேர்ந்த பேச்சியப்பன் (27), முத்துக்குமார் (20) வத்திராயிருப்பதைச் சேர்ந்த முத்து (40), சூர்யா (22), பால்பாண்டி (45) ஆகியோர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் பேசுகையில், “ரஞ்சித் குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்படி, வத்திராயிருப்பு-அர்ச்சுனாபுரம் சாலையில் உள்ள வயல்வெளியில் நடந்துவந்த முருகனை, ரஞ்சித்குமார் உட்பட அவரின் நண்பர்கள் 6 பேரும் சேர்ந்துதான் கழுத்தை அறுத்துக் கொலைசெய்திருக்கின்றனர். தந்தையின் சாவுக்கு பழிக்குப்பழியாக நடந்த கொலை என்பதால் மொத்த பழியையும் ஏற்றுக்கொண்டு வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ரஞ்சித் குமார் மட்டும் வந்து சரணடைந்திருக்கிறார். கொலைசெய்யப்பட்ட முருகனின் உடலில் ஆழமாக ஏற்பட்டிருந்த காயம் எங்களுக்குச் சந்தேகத்தை வரவழைத்தது. அதனடிப்படையில் ரஞ்சித் குமாரிடம் விசாரணை நடத்தி கொலையில் தொடர்புடைய மேலும் 5 பேரைக் கைதுசெய்திருக்கிறோம்” என்றனர்.