தமிழ்நாட்டின் நெற்களஞ்சிய பூமியான தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு காவிரி ஆற்றின் மூலமாகத்தான் நீர்ப்பாசன சேவை கிடைக்கிறது. கர்நாடாகவில் பிறந்து தமிழ்நாட்டில் பாயும் காவிரியாற்று தண்ணீர் மேட்டூர் அணையில் தேக்கி வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக டெல்டா மாவட்டங்களுக்கு திறந்து விடப்படுகிறது.
‘இந்த ஆண்டு 453 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த 48 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் அதிகளவிலான தண்ணீரை திறந்து விட்டுள்ளோம்’ என்று கர்நாடகம் சொல்லி இருக்கிறது.
கடந்த ஜூன் மாதத்தில் 16.46 டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதத்தில் 106.93 டிஎம்சி தண்ணீரும், ஆகஸ்ட் மாதத்தில் 223.57 டிஎம்சி தண்ணீரும், செப்டம்பர் மாதத்தில் 105.52 டிஎம்சி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. ஆனால் மேட்டூர் அணை 93.47 டிஎம்சி தண்ணீரை தேக்கிவைக்கும் அளவுதான் கொள்ளளவு கொண்டது.
அதிகளவிலான உபரி தண்ணீர் கடலில்தான் கலந்திருக்கிறது. காவிரியிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை தேக்கி வைத்தாலே தமிழ்நாட்டில் நீர்ப்பாசனம் ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்று தமிழகத்து பொதுப்பணி துறை பொறியாளர்களும், நீரியல் வல்லுநர்களும் கூறுகின்றனர். ஆனால், அதற்கான திட்டங்கள் தான் முன்னெடுக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து மூத்த பொறியாளர் முனைவர் வீரப்பனிடம் பேசினோம். அவர், “காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதாக நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒரு தடுப்பணை மூலம் சுமார் 0.50 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தேக்கிவைக்க முடியும். பத்து தடுப்பணைகள் மூலம் 5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தேக்கிவைக்க முடியும். இத்திட்டம் வரவேற்கத்தக்கதே. ஆனால், காவிரியில் பெருக்கெடுக்கும் வெள்ளத்துக்கு இது ஈடுகொடுக்குமா என்பதை யோசிக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீரை செறிவூட்டவும், ஆற்றின் நீர் போக்கையும் நிலை நிறுத்துவதும் அவசியம்.
ஆண்டு முழுவதும் நிலத்தடி நீரை நிலைநிறுத்திடவும், குடிநீர் தேவைக்கான 32 டிஎம்சி தண்ணீரை மேட்டூர் அணையிலிருந்து திறந்து விட வேண்டும். புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய 7 டிஎம்சி தண்ணீரையும், கடலில் கலக்க வேண்டிய 10 டி எம்சி தண்ணீரையும் வருடந்தோறும் உறுதிப்படுத்த வேண்டும். மிகை வெள்ள நீரை சேமிப்பதற்கு எங்கள் சங்கத்தின் சார்பாக சில பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் காவிரிக்கு குறுக்கே மேக்கேதாட்டூ அணைக்கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தடைப்படும். மேக்கேதாட்டூ அணைக்கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு சம்மதிப்பது தமிழகம் தற்கொலை செய்வதற்கு சமமானது. அதனால் ஒருபோதும் மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கு தமிழ்நாடு உடன்படக்கூடாது. காவிரியிலிருந்து பெறப்படும் மிகைநீரை நீரேற்றம் மூலம் வறட்சியான பகுதிகளில் நீர்ப்பாசனம் ஏற்படுத்தி தரலாம்” என ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கினார்.