இந்தியாவில் மிகப் பெரும் அளவில் நன்கொடை கொடுப்பவர்கள் பட்டியலில் ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்று `எடெல்கிவ் ஹுருன் இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியல் 2022′ கூறுகிறது.
ஒவ்வோர் ஆண்டும், `ஹுருன் இந்தியா’ என்ற நிறுவனம் எடெல்கிவ் ஹுருன் இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியல் என்ற அறிக்கையை வெளியிடும். இந்த நிறுவனம் 2022-ம் ஆண்டு நன்கொடையாளர்கள் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்டது.
2022-ம் ஆண்டு நன்கொடையாளர் பட்டியலில், ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் 1,161 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் நாள் ஒன்றுக்கு, சராசரியாக 3 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல் இடம் வகித்து வந்த `விப்ரோ’ நிறுவனர் அசிம் பிரேம்ஜி தற்போது 484 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். Zerodha, Unilazer group மற்றும் முன்னாள் flipkart நிறுவனர் பின்னி பன்சாலின் நிறுவனம் ஆகிய மூன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் சேர்த்து, கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்காக ரூ.166 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய பணக்காரரான கௌதம் அதானி 190 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய நாட்டில் ரூ.100 கோடி, ரூ.50 கோடி மற்றும் ரூ.20 கோடிக்கு அதிகமாக முறையே 15, 20 மற்றும் 43 பேர் நன்கொடை வழங்கியுள்ளனர். இந்த ஆண்டு பட்டியலில் ஆறு பெண் நன்கொடையாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டைவிட இந்த வருடம் நன்கொடை தொகை அதிகரித்திருந்தாலும், நன்கொடை வழங்குபவர்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து மூன்றாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.