இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியாகப் பதவி வகித்த பிபின் ராவத்தின் மறைவுக்குப் பிறகு, நாட்டின் முப்படை தலைமைத் தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுகான், மத்திய அரசால் இன்று நியமிக்கப்பட்டிருக்கிறார். கூடவே இந்திய ராணுவ விவகாரத்துறை செயலாளராகவும், அனில் சவுகான் செயல்படுவார் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
முன்னதாக கடந்த டிசம்பரில், பிபின் ராவத், அவர் மனைவி உட்பட 13 பேர் நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக, முப்படை தலைமைத் தளபதி பதவி காலியாகவே இருந்தது. இந்த நிலையில்தான், ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் அனில் சவுகானை, நாட்டின் இரண்டாவது முப்படை தலைமைத் தளபதியாக மத்திய அரசு நியமித்திருக்கிறது.
இவர், கடந்த ஆண்டு மே மாதம்தான், கிழக்குக் கட்டளைத் தளபதியாக(Eastern Command Chief) ஓய்வு பெற்றார். இந்திய ராணுவத்தில் 40 ஆண்டுகள் பணியாற்றியிருக்கும் அனில் சவுகான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் விரிவான அனுபவத்தைப் பெற்றவராவார்.
அதுமட்டுமல்லாமல் அனில் சவுகான், கடக்வாஸ்லாவிலுள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் டேராடூனிலுள்ள இந்திய இராணுவ அகாடமியின் முன்னாள் மாணவருமாவார். மேலும் இவர், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் `பரம் விஷிஷ்ட் சேவா’ பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.