இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பொதுவான இடத்தில் டெஸ்ட் தொடரை நடத்த பாகிஸ்தான் போர்டிடம்(board) இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அதற்கு பிசிசிஐ மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் போட்டிகள் நிறுத்தப்பட்டு, ஐசிசி தொடர்களில் அனைத்து அணிகளும் பங்கேற்கும் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்து விளையாடி வருகின்றன.
கடைசியாக இரு அணிகளுக்கும் இடையே 2011ஆம் ஆண்டு பிளேட்ரல் சீரிஸ் தொடரும், 2007ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெற்றது. பின்னர் அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு அணிகளுக்கும் இடையேயான போட்டிகளை பிசிசிஐ நிறுத்தியது.
இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 7 டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதனிடையே இங்கிலாந்து அணி நிர்வாகம் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு பிசிசிஐ மறுத்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து செய்திதாள் வெளியிட்டுள்ள தகவல் படி, இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே வியாபார நோக்கத்தில், தெற்கு ஆசிய மக்கள்தொகை அதிகம் கொண்ட இங்கிலாந்தில் போட்டிகள் பெரும் கூட்டத்தை ஈர்க்கும் விதத்தில் அமையும் என்பதாலும், ஸ்பான்சர்ஷிப் வருவாய் மற்றும் தொலைக்காட்சி பார்வையாளர்களை அதிகரிக்கும் முயற்சியாகவும் 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் பொது இடத்தில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.
அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிபி விருப்பம் தெரிவிக்காமல் போனாலும், இங்கிலாந்தின் முயற்சிக்கு நன்றி தெரிவித்துள்ளாதாகவும், ஆனால் பிசிசிஐ அதற்கு ஜீரோவுக்கும் குறைவான வாய்ப்பே இருப்பதாக மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், ”இந்த முயற்சி சற்று வித்தியாசமானது. எப்படியிருந்தாலும், பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் என்பது பிசிசிஐ முடிவெடுக்கும் விஷயம் அல்ல, அது அரசாங்கத்தின் முடிவு. தற்போது வரை முந்தைய நிலைப்பாடே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் பல அணிகள் பங்கேற்கும் தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் விளையாடுகிறோம்” என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.