தூத்துக்குடி மாவட்டம், காயாமொழியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத் திறப்புவிழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஒரேநாளில் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 3 பேருக்கு மேல் காய்ச்சல் உள்ளவர்கள் இருக்கிற இடங்களைக் கண்டறிந்து அங்கு சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அந்த வகையில், நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த காலங்களில், குறிப்பாக பருவநிலை மாற்றங்களின்போது வருகிற அளவுதான் இப்போதும் இருக்கிறது. தற்போது உள்ள காய்ச்சல் பருவநிலை மாற்றங்களால் ஏற்படுவதுதான். இது ஒரு தனி வைரஸின் பாதிப்பு என பயப்படத் தேவையில்லை.
கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஆரம்பச் சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் வட்டார, மாவட்ட அரசு மருத்துமனைகள் என 11,333 மருத்துவ மையங்களில் நடைபெறவிருக்கிறது. முதல் தவணை தடுப்பூசி 96 சதவிகிதமும், இரண்டாவது தவணை தடுப்பூசி 91 சதவிகிதமும், மாணவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி 12 முதல் 14 வயது பிரிவினருக்கு 90 சதவிகிதமும், 15 முதல் 17 வயது பிரிவினருக்கு 92 சதவிகிதமும் கடந்திருக்கிறோம்.
அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு என்பதே இல்லை. அப்படி பொதுமக்கள் ஏதாவது ஒரு மருத்துவமனைக்கு போய் மருந்து தட்டுப்பாடு இருக்கிறது என்று சொன்னால் 104 என்கின்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்” என்றார்.