தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு வருகைதந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியது ஏற்புடையதல்ல. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. மின்கட்டணம் உயர்வு என்பது கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட ஷாக்கைவிட மின்கட்டண உயர்வு ஷாக் மக்களை பாதித்திருக்கிறது. தி.மு.க வாக்குறுதிகள் மூலம் ஆட்சிக்கு. வந்தது ஆனால், தற்போது வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அரசாக இருக்கிறது. தி.மு.க அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
ஆகவே, வருகின்ற காலங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்மறையான ஓட்டுக்கள் எதிர்க்கட்சிகளுக்கு விழுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு மக்கள், பொருளாதார ரீதியாக படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில், மக்களைக் குறிவைத்து மக்களை தாக்குவது போல அரசு வீட்டு வரி உயர்வு, மின்கட்டண உயர்வு சுமையை மக்கள்மீது வைத்திருப்பது, அவர்கள்மீது அக்கறையில்லாத அரசு என்பதையே காட்டுகிறது.
ராகுல் காந்தி நடைப்பயணம், அந்தக் கட்சிக்கு வேண்டுமானால் பிரயோஜனமுள்ளதாக இருக்கலாம். ஆனால், அதனால் நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. தனியார் பேருந்துகளில் கண்மூடித்தனமான கட்டணங்கள் இருக்கக்கூடாது. தமிழ்நாடு போதைப்பொருள் நடமாட்டத்தில்தான் தலை நிமிர்ந்து நிற்கிறது.
ஒரு மாநிலம் இப்படி இருப்பது வேதனைக்குரியது, வெட்கக்கேடானது. பத்திரிகைச் செய்திகளை பார்க்கும்போது சிறியவர்கள் பெரியவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். கல்லூரி, பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் போதையில் இருப்பதைப் பார்த்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் கவலைக்குள்ளாகியிருக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் காவல்துறையினரின் கைகளை கட்டிப்போட வேண்டாம்” என்றார்.