சிறுவயதியில் கைகூடாமல் போன 72 வயது முதியவரின் காதணி அணியும் விழாவை, அவரது பேரன், பேத்திகள் நடத்தி, அந்த பெரியவரை நெகிழ வைத்திருக்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சுல்தான் பேட்டையைச் சேர்ந்த வரதராஜன். இவர், எஸ்.எஸ்.எல்.சி., படிக்கும் போது மாநில அளவிலான கபடி வீரராக இருந்திருக்கிறார்.
தொடர்ந்து வேலை, திருமணம், குழந்தைகள், அவர்களின் திருமணம் என்று வாழ்க்கையின் தொடர் ஓட்டத்தில் சிக்கியதால், தனது சிறுவயது ஆசையை யாரிடமும் சொல்லாமல் மனதில் அடக்கி வைத்திருக்கிறார். இந்நிலையில், அவரின் எட்டு பேரன், பேத்திகளிடம் யதேச்சையாக, சிறுவயதில் கைகூடாமல் போன காதுக்குத்திக்கொள்ளும் ஆசையைச் சொல்ல, பேரன், பேத்திகள் அவரது ஆசையை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
இதனால், நெகிழ்ச்சியில் இருக்கும் வரதராஜனிடம் பேசினோம்.
“1969 ம் ஆண்டு, ஓட்டுநர் உரிமம் பெற்று, நான் படித்த பள்ளியிலேயே ஓட்டுநராக பணிக்குச் சேர்ந்தேன். கபடியில் மாநில அளவிலான பிளேயராக இருந்ததால், இந்திய அளவில் ஆடணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, குடும்பச் சூழலால அந்த ஆழைச நிறைவேறாமல் போனது.1972 ம் ஆண்டு தனலட்சுமிக்கும், எனக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு நான்கு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தனர். இதனிடையே, சேலம் சதரன் ரோடு வேஸ் மற்றும் டி.வி.சுந்தரம் நிறுவனத்தில் சேர்ந்து, 28 ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வுபெற்றேன். எனக்கு எல்லாம் என் மனைவிதான். அவங்க இல்லாம எதையும் செய்யமாட்டேன். ஆனால், என்னோட மனைவி தனலட்சுமி, கடந்த 2019 ல் இறந்துவிட்டார். அப்போதிருந்தே மனதளவில் உடைஞ்சுட்டேன். இப்போ, சுல்தான் பேட்டையில் உள்ள மகன் வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு ஐந்து பேரன்கள், மூன்று பேத்திகள் உள்ளனர்.
என்னோட சிறுவயது ஆசை ஒண்ணு நிறைவேறாம மனசில் இருந்தது. எனக்கு காதுக்குத்து விழா நடத்தணும்னு ஆசைப்பட்டேன். எனது சிறுவயதில் காது குத்துவதற்காக, குலதெய்வ கோவிலுக்கு எங்க பெற்றோர் என்னை அழைச்சுக்கிட்டு போனாங்க. ஆனால், அங்க எதிர்பாராதவிதமாக காதணி விழாவிற்கு கொண்டு சென்ற தங்கத் தோடுகள், புது துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயிடுச்சு. அதனால், அதன்பிறகு அந்த நிகழ்ச்சியை நடத்தவேயில்ல. ஏக்கமா மனசில தங்கிவிட்ட அந்த ஆசையை, என்னோட பேரன், பேத்திகள்கிட்ட சொன்னேன். அவங்க உடனே என்னோட பிள்ளைங்ககிட்ட சொல்லி, என்னோட ஆசையை இப்போ நிறைவேத்திட்டாங்க. ரொம்ப நெகிழ்ச்சியாவும், மகிழ்ச்சியாவும் இருக்கு தம்பி. என்ன ஒண்ணு, என்னோட மனைவி இல்லையேங்குற குறை மட்டும்தான்” என்று நா தழுதழுத்தார்.
இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய, வரதராஜனின் மகன் செந்தில்நாதன்,
“எங்கப்பா ரொம்ப நேர்மையானவர். எதுக்கும், யார்கிட்டயும் கடன்வாங்கமாட்டார். சேலத்துல வேலையில இருந்தப்ப, காசை மிச்சம் பண்ணி, 8 பிளாட்டுகள் வாங்கிப்போட்டார். அதை வித்து ஒவ்வொரு பொண்ணுக்கும் திருமணம் பண்ணிக் கொடுத்தார். மூணாவது பொண்ணுக்குத் கல்யாணம் பண்ண முடிவு பண்ணப்ப, அவர்கிட்ட பணம் இல்லை. அதனால், இரண்டு வருஷம் வேலையில் சர்வீஸ் இருந்தும், வி.ஆர்.எஸ் வாங்கிட்டு, அதுல கிடைச்ச பணத்தை வச்சு கல்யாணம் பண்ணி வச்சார்.
அதனால், தன்னோட சிறுவயது ஆசையைச் சொன்னால், அந்த நிகழ்ச்சியை நடத்த பிள்ளைங்களுக்கு செலவாகுமேன்னு நினைச்சு, மனசுலேயே புதைச்சு வச்சுருந்தார். இரண்டு மாசத்துக்கு முன்னாடி, எல்லா உறவுகளும் கலந்துகிட்ட ஒரு நிகழ்ச்சியிலதான், அவரோட பேரப்பிள்ளைங்க ஒருத்தர்கிட்ட யதேச்சையா தன்னோட ஆசையை சொல்லியிருக்கிறார்.
உடனே, அவரோட பேரப்பிள்ளைங்க எங்ககிட்ட சொல்ல, மண்டபம் பிடிச்சு, 1,000 பேரைத் திரட்டி, அசைவ உணவு போட்டு, அவரோட காதணி விழாவை பிரமாதப்படுத்த நினைத்தோம். ஆனால், இடையில் புரட்டாசி மாதம் குறுக்கிட்டதால, இப்போதைக்கு சிம்பிளா நடத்தினோம். அப்பாவுக்கு எங்களோட குலதெய்வக் கோயிலான நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில்ல வச்சு முடி எடுத்தோம். தொடர்ந்து, எங்க வீட்டுல நெருங்கிய உறவுகளை அழைத்து, அவருக்கு காதணி விழா நடத்தினோம்.
நாலு சகோதரிகள் குடும்பம், என்னோட மாமனார் வீடுன்னு பலரும் அப்பாவுக்கு சீர் கொண்டு வந்தாங்க. எங்களுக்காக தன்னோட ஆசையை மறைச்சுக்கிட்ட அப்பாவோட ஆசையை, அவங்க பேரக்குழந்தைங்க நிறைவேத்திட்டாங்க. புரட்டாசி முடிந்ததும், மண்டபம் பிடித்து, 1,000 பேரை அழைத்து அசைவ விருந்து வச்சு, இந்த விழாவை இன்னும் சிறக்க வைப்போம். அப்பாவின் மனதை குளிர வைப்போம்” என்றார்.
வரதராஜனின் மகள்வழி பேத்தியான மீனா,
“எங்க தாத்தாக்குள்ள இப்படி ஒரு ஆசை இருக்கும்னு எங்களுக்கு முன்னாடியே தெரியாமப் போச்சு. குடும்பச் சூழலால, தன்னோட ஆசையை மறைச்சுக்கிட்டு இத்தனை வருஷம் வாழ்ந்திருக்கிறார். ஆனா, தன்னைபோல தன் பிள்ளைங்களும், பேரப்பிள்ளைங்களும் ஏங்கி நிக்ககூடாதுங்கிறதுக்காக, அவரோட அஞ்சு பிள்ளைங்க, எட்டு பேரப்பிள்ளைங்களுக்கும் முன் நின்னு, காதணி விழா நடத்தியிருக்கார். ஆனா, நாங்க அவர்கிட்ட, ‘உங்க நிறைவேறாத ஆசை ஏதும் இருக்கா தாத்தா?’னு கேக்கப் போக, இது தெரிய வந்து, சிறப்பா விழாவை கொண்டாடினோம்.
“உங்க மடியில எங்களை அமர வச்சு எங்களுக்கு காதணி விழா நடத்துவீங்கனு நினைச்சா, எங்க மடியில உங்களை உட்கார வச்சு, உங்களுக்கு காதணி விழா நடத்துறாப்புல வச்சுட்டீங்களே’னு தாத்தாவை கேலி பண்ணினோம். அவர் வெட்கப்பட்டு சிரிச்சதோட, கண்கலங்கியது எங்களுக்கு பெரிய நிறைவை கொடுத்திருக்கு. தாத்தா, எங்க அம்மாயி மேல ரொம்பப் பிரியமா இருப்பார். அதனால், இறந்துபோன எங்க அம்மாயி சிலையை தத்ரூபமா செஞ்சு வச்சு, அது பக்கதுல இவரை உட்கார வச்சு காது குத்தலாம்னு இருந்தோம். ஆனா, பல காரணங்களால அது நடக்கலை. அடுத்து, இந்த விழாவை மண்டபத்துல கிராண்டா நடத்தும்போது, அப்படி பண்ண முயற்சிப்போம்” என்றார்.