காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவின் கணவர் ராபர்ட் வதேரா மீது அமலாக்கப்பிரிவு பணமோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில் ராபர்ட் தற்போது ஜாமீனில் இருக்கிறார். ராபர்ட் வதேரா கடந்த மாதம் 12-ம் தேதியில் இருந்து நான்கு வாரத்திற்கு இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி சென்று வர சிறப்பு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது. பயண திட்டத்தில் இங்கிலாந்திற்கு துபாய் வழியாக செல்வதாக ராபர்ட் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் பயணத்தின் போது ராபர்ட் வதேரா துபாயில் 25-ம் தேதியில் இருந்து 29ம் தேதி வரை தங்கி இருந்துவிட்டு பிரிட்டன் சென்றுள்ளார்.
வெளிநாடு சென்று வர கோர்ட் விதித்திருந்த நிபந்தனையை ராபர்ட் வதேரா மீறி துபாயில் நான்கு நாள்கள் தங்கி இருந்துள்ளார். இது குறித்து நேற்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மருத்துவ காரணங்களுக்காக துபாயில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக ராபர்ட் தெரிவித்தார். ராபர்ட் சார்பாக வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி துபாய் வழியாக செல்லவேண்டும் என்பதற்கு பதில் துபாய் சென்றது தவறுதான் என்றும், அதனை நாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், வழக்கறிஞர் தெரிவித்தார்.
போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ராபர்ட் வதேரா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அவர் கோர்ட்டில் கொடுத்துள்ள டெபாசிட் தொகையை கோர்ட் கையகப்படுத்தவேண்டும் என்று அமலாக்கப்பிரிவு வழக்கறிஞர் வாதிட்டார். ராபர்ட் வதேராவின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதி நிலோபர், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ஏன் டெபாசிட் தொகையை கோர்ட் கையகப்படுத்தக்கூடாது என்று கேட்டு ராபர்ட் வதேராவிற்கு நோட்டீஸ் கொடுக்க கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். ராபர்ட் வதேரா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தை ஏற்க முடியாது என்றும், ராபர்ட் வதேராவின் டிக்கெட்டை ஆய்வு செய்ததில் அவர் துபாயில் தங்கி செல்ல திட்டமிட்டு இருந்தது தெளிவாக தெரிகிறது என்று நீதிபதி குறிப்பிட்டார்.