சுரேஷ் ரெய்னா இன்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே 2020ல் சர்வதேச போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறும்போது அவருடன் ரெய்னாவும் ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் 2021ம் ஆண்டு விளையாடினார். 2022ல் ஏலத்தில் பெயரைப் பதிவு செய்திருந்த ரெய்னாவை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை! மேலும் உள்ளூர் போட்டிகளிலும் அவர் விளையாடிப் பல ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் தற்போது ஐபிஎல், இந்திய உள்ளூர் போட்டிகள் என அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.
இது மட்டுமின்றி அவர் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. பொதுவாக பிசிசிஐ ஒப்பந்தம் இருக்கும் வீரர்கள் வெளிநாடு T20 தொடர்களில் பங்கேற்க அனுமதி இல்லை. அதனால் பிசிசிஐ-யிடம் வெளிநாட்டு T20 தொடர்களில் பங்கேற்க ரெய்னா அனுமதிக்கோரியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
சுரேஷ் ரெய்னா ஐ.பி.எல் வரலாற்றில் 205 போட்டிகளில் விளையாடி 32.51 சராசரியில் 136.76 ஸ்ட்ரைக் ரேட்டில் 5528 ரன்கள் அடித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றிருப்பவர் அவரே!