சென்னை, நொளம்பூர் அபிநயம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் சீனிவாசன் மூர்த்தி. இவர் முகப்பேர் மேற்கு சந்தான சீனிவாசன் பெருமாள் கோயில் தெரு அருகே இறந்துகிடப்பதாக 14.8.2022-ம் தேதி இரவு நொளம்பூர் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சீனிவாசன் மூர்த்தியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சந்தேக மரணம் என்று போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இந்த நிலையில் நொளம்பூர் போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது சீனிவாசன் மூர்த்தி இறந்ததற்கான காரணம் தெரியவந்தது.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “கடந்த 14-ம் தேதி சீனிவாசன் மூர்த்தி குடிபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார். முகப்பேர் மேற்கு சந்தான சீனிவாச பெருமாள் கோயில் தெருவில் சீனிவாசன் மூர்த்தி காரில் சென்றபோது அந்த தெருவில் நிறுத்தப்பட்டிருந்த மாறன் என்பவரின் கார்மீது மோதியுள்ளார். அதனால் மாறனும் அவரின் தந்தை சுகுமாறனும், சீனிவாசன் மூர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சீனிவாசன் மூர்த்தியை இருவரும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் மாறனும் சுகுமாறனும் அங்கிருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டனர். விசாரணையில் இந்தத் தகவல் கிடைத்ததும் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி மாறன், சுகுமாறனைக் கைதுசெய்துள்ளோம். நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்” என்றனர்.