விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் திமுக-வில் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வந்துள்ளார். இவரின் தாய் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிட்டவராம்.

சொந்த வேலை காரணமாக கோட்டக்கரையில் இருந்து திருசிற்றம்பலம் கூட்டுச்சாலை நோக்கி இன்று காலை 6.30 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார் ஜெயக்குமார். அப்போது, இரும்பை எனும் இடத்தில் கத்தியை காட்டி திடீரென வழிமறித்துள்ளது மூன்று பேர் கொண்ட கும்பல். சுதாரித்துக் கொண்ட ஜெயக்குமார், அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

வெட்டிக் கொலை

ஆனால், அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளது. உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஆரோவில் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஆரோவில் போலிஸாரிடம் விசாரித்த போது, “2020-ம் ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவம் ஒன்றில் ஜெயக்குமாரின் தம்பி மகன் தமிழ்வேந்தன் என்பவர் சம்பந்தப்பட்டிருந்துள்ளார். அவரை, ஜெயக்குமார் தான் ஜாமீன் எடுத்ததாக தெரிகிறது. அந்த விரோதத்தின் அடிப்படையில் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. மேலும், வானூர் பி.டி.ஓ அலுவலகம் அருகே உள்ள டீ கடையில் இந்த நபர் தினமும் காலையில் டீ குடிப்பதற்கு வருவார். அதை தெரிந்து கொண்டு தான், இன்று காலை 6.45 மணியளவில் இரும்பை சிவன் கோயில் அருகே வரும்போது வழிமறித்து வெட்டியுள்ளனர்.

ஆரோவில் காவல் நிலையம்

முதற்கட்ட விசாரணையில், குமாரவேல், சந்துரு, குமார் என்பவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்களை தேடி வருகிறோம். புகார் பெறப்பட்டதும் வழக்கு பதிந்து அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.