கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் லட்சுமி. `ஊர்வம்பு’ லட்சுமி என்றால் தான் சட்டென இவரது முகம் பலருக்கும் நினைவில் வரும்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ தொடரில் வனஜா என்கிற கதாபாத்திரத்தில் அத்தனை இயல்பாய் பொருந்திப் போனவர் நிஜத்தில் நேரெதிர். அத்தனை அன்பாய் அனைவரையும் அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பேரன்பு’ தொடரில் நடித்துக் கொண்டிருப்பவரை ஷூட்டிங் இடைவெளியில் சந்தித்தோம்.

‘ஊர்வம்பு’ லட்சுமி

ப்ராம்ப்ட் என்பதே இல்லாமல் நடித்துக் கொண்டிருந்தவரிடம் எப்படிங்க என்றதும் கடகடவென பேசத் தொடங்கினார். நான் என்னுடைய பாலர் பள்ளி, கவிதாலயா பள்ளியில் படிச்சதால நல்ல விஷயங்கள் நிறைய கத்துக்கிட்டேன். அங்க எல்லாமே லைவ் ரெக்கார்டிங் என்பதால் அப்படியே பழகிடுச்சு. ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் நிறைய புத்தகங்கள் படிக்கணும். பல புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் புதுப்புது வார்த்தைகள் கத்துக்க முடியும். அந்த வார்த்தைகள் என்னவென்பதை உணர்ந்து உள்வாங்கி நடிக்கும்போது இயல்பாவே ப்ராம்ப்ட் நமக்கு தேவைப்படாது. இன்னைக்கு வர்ற பலர் ப்ராம்ப்ட் இல்லாம தான் நடிக்க விரும்புறாங்க. அது வரவேற்கத்தக்க ஒன்று!

`செம்பருத்தி’ தொடரில் வனஜா கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று! பிரியா ராமன் மேம் செம்பருத்தி வெற்றி விழாவில் சொன்னது மாதிரி வனஜாவும், லட்சுமியும் வேற வேற கேரக்டர்கள். ஷபானா செட்ல என்னை அம்மான்னு தான் கூப்பிடுவாங்க. இப்ப `பேரன்பு’ தொடரில் அமுதா என்கிற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிச்சிட்டு இருக்கேன். ஆரம்பத்தில் அமுதா கேரக்டரில் நடிக்க ரொம்பவே யோசிச்சேன். வனஜா எல்லாருக்கும் பிடிச்ச கேரக்டர். எங்க வீட்டிலும் இப்படி ஒருத்தர் இருக்காங்கன்னு ஆடியன்ஸ் சொல்லுவாங்க. எல்லாருக்குள்ளேயும் ஒரு மிருகம் இருக்கும். அப்படியாகத்தான் ஆடியன்ஸ் வனஜாவை ஏத்துக்கிட்டாங்க.

‘ஊர்வம்பு’ லட்சுமி

‘ஊர்வம்பு’ நிகழ்ச்சி பண்ணிட்டு அதுல இருந்து வெளியில் வர ரொம்ப கஷ்டப்பட்டேன். நாம வேலையை லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டா அது கூடவே வாழ ஆரம்பிச்சிடுவோம். நீங்க அதுக்கு எவ்வளவு உண்மையா இருக்கீங்களோ அந்த அளவுக்கு அதுவும் உங்களுக்கு உண்மையாக இருக்கும். ஆரம்பத்தில் நெகட்டிவ் கம்மென்ட்ஸ் நிறைய வந்தது. எல்லாரும் திட்டினாங்க. ஆனா, அதை நான் மிகப்பெரிய அவார்டாகத்தான் நினைச்சேன். அதனாலேயே வனஜாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

‘ஊர்வம்பு’ லட்சுமி

முதல் வருஷம் பெஸ்ட் வில்லி, இரண்டாவது மற்றும் மூன்றாவது வருஷம் செம்பருத்தி தொடருக்காக ஃபேவரைட் வில்லி அவார்டு எனக்கு கிடைச்சது. பலர் இந்த வருஷமும் நீங்க தான் அவார்டு வாங்குவீங்கன்னு சொன்னாங்க. நான் சரியான பாதையில் போகிறேன்னு மக்கள் சொல்றதாகத்தான் எடுத்துக்கிறேன். நான் எப்பவும் ரெஸ்ட் எடுக்க நினைக்கவே மாட்டேன். நாம தான் இத்தனை அவார்டு வாங்கிட்டோமே இளைஞர்கள் வாங்கட்டும்னுலாம் நினைக்க மாட்டேன். என் கூட நீங்களும் போட்டி போட்டு ஜெயிங்கன்னு தான் நான் சொல்லுவேன் என்றவரிடம் சமூக வலைதள பக்கங்களில் அரசியல் சார்ந்த விஷயங்களை பதிவிடுவது குறித்துக் கேட்டோம்.

“நான் சோசியல் மீடியாவில் ரஜினி சாருக்காக வாய்ஸ் அவுட் பண்ணப்ப நிறைய பேர் விமர்சனம் செய்தாங்க. என் மனசுக்கு சரியான விஷயம் பேசுறேன்னு தோனுறதைத் எந்தத் தயக்கமும் இல்லாம சொல்றதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தேன். ஶ்ரீமதி விஷயத்தை நான் கமர்ஷியலாக பார்க்கல. நாம சொல்ற கருத்தை 1000 பேர் பார்த்தாலும் அதில் 100 பேர் கேட்டாலும் போதும்னுதான் அதுகுறித்து பதிவிட்டேன். இதுவரைக்கும் ஶ்ரீமதி கூட படிச்ச பசங்க யாரும் ஏன் எதுவும் சொல்ல மாட்டேன்றாங்க? தவறு நடந்தா அதை தயங்காம வெளியே வந்து சொல்லுங்க. இனியும் ஒருத்தருக்கு இப்படி நடக்கக்கூடாது. அதே மாதிரி, குழந்தை ஒரு விஷயத்தை சொல்லும்போது பெற்றோர்கள் அதை அசிங்கம், அவமானம்னு சொல்லாதீங்க. பார்க்கிறவங்களுக்கு இன்னைக்கு நியூஸ் அவ்வளவுதான்.. அதனால பாதிக்கப்படப் போவது நம்ம குழந்தை தான். முதலில் குழந்தைகளிடம் எதையும் மூடி மறைக்காதீங்கன்னு சொல்லிக்கொடுங்க. அவங்களுக்குள் பயம் ஏற்படுத்தாதீங்க. ஸ்கூல் விட்டு வந்ததும் இன்னைக்கு வகுப்பில் என்ன நடந்ததுன்னு பொறுமையா எல்லாத்தையும் கேளுங்க. குழந்தைகளுக்கு எல்லா விஷயத்தையும் எப்படி கையாளணும்னு கத்துக் கொடுங்க என்றவர் அவருடைய கரியர் குறித்து பேசினார்.

‘ஊர்வம்பு’ லட்சுமி

அந்த சமயம் பிஸியாக தொடர்களில் நடிச்சிட்டு இருக்கும்போது ஒரு ad making கம்பெனியில் வேலை கிடைச்சது. பார்ட் டைமா அந்த வேலையை பண்ணிட்டும், நடிச்சிட்டும் இருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல அந்த வேலையில் அதிக ஆர்வம் வர அதையே முழு நேர வேலையாக மாத்திக்க நினைச்சேன். அதனால அத்திப்பூக்கள் சீரியலில் மட்டும் முழுமையா நடிச்சுக் கொடுத்தேன். மற்ற ரெண்டு சீரியல்களில் இருந்தும் விலகிட்டேன். மீடியாவிற்கு பிரேக் எடுத்துட்டு ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். அந்த சமயம் எனக்கொரு ஆக்சிடென்ட் ஆச்சு. கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் கழிச்சு கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்துகிட்டு டைட்டில் வின் பண்ணினேன்.

மறுபடி மீண்டும் ராஜகுமாரி, வம்சம்னு சீரியலில் நல்ல கதாபாத்திரம் கிடைச்சது. வேலை, நடிப்பு ரெண்டையும் பண்ணிட்டு இருந்தேன். அப்புறம் ரெண்டையும் விட்டுட்டு வீட்டில் சும்மா இருந்தேன். ஆக்சிடென்ட் ஆன சமயம் வீல் சேரில் தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க. எப்படி அவ்வளவு பெரிய அடியைத் தாண்டி வந்தேன்னே தெரியல. என்னோட வில் பவர் எந்த அளவுக்கு இருக்குன்னு அந்த சமயத்தில் தான் எனக்கே தெரிஞ்சது. 85 கிலோ எடையில் அப்படியே நின்னுட்டேன். நான் பர்சனலா எடை குறைச்சா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்ணினேன். குண்டானதால எனக்கு சில சிரமங்கள் ஏற்பட்டுச்சு. மூச்சு வாங்குறது, முட்டி வலின்னு தொடர்ந்து பிரச்னைகள் வந்துச்சு. டயட் மெயின்டெயின் பண்ணி உடல் எடையை குறைச்சேன். இந்த உணவு சாப்பிட்டா கலர் ஆகிடுவீங்க, இத சாப்பிட்டா வெயிட் லாஸ் ஆகும்னு சொன்னா நம்பாதீங்க. நான் கண்மூடித்தனமா எதுவும் செய்ய மாட்டேன். முறையான உடற்பயிற்சியுடனும், ஹெல்தியான டயட்டுடனும் என் வெயிட் லாஸ் பயணத்தை ஆரம்பிச்சேன். உடல் எடையை நான் நினைச்ச மாதிரி குறைச்சேன்!’ என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து லட்சுமி நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.