சென்னை, ராயபுரம், சோமு செட்டி தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (40). இவர், வேலாயுத பாண்டியன் தெருவில், ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரின் மனைவி முத்துலட்சுமி (37). இந்தத் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சரவணன் மதுவுக்கு அடிமையானவர் என்பதால் அடிக்கடி மனைவி முத்துலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் மது அருந்திவிட்டு சரவணன் நேற்று (18.7.2022) வீட்டுக்கு வந்திருக்கிறார்.

கொலை

பின்னர், சரவணன் மனைவி முத்துலட்சுமியை அடித்து போதையில் துன்புறுத்தியிருக்கிறார். ஒருகட்டத்தில் மனைவியின் ஆடைகளை கழற்றி அவரை நிர்வாணப்படுத்தி வீட்டைவிட்டு வெளியே செல்லும்படி சரவணன் கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த முத்துலட்சுமி, சரவணனின் கழுத்தை பனியனால் நெரித்திருக்கிறார். இதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

இதையடுத்து சரவணன் கொலைசெய்யப்பட்ட தகவலை ராயபுரம் போலீஸாருக்கு அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சரவணனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கணவரைக் கொலைசெய்த குற்றத்துக்காக முத்துலட்சுமியை கைதுசெய்தனர். முத்துலட்சுமியிடம் போலீஸார் விசாரித்தபோது கொலைக்கான காரணம் தெரியவந்தது.

கைது

இது குறித்து போலீஸார், “முத்துலட்சுமியின் பெயரில் தஞ்சாவூரில் சொத்து இருக்கிறது. அதை தன்னுடைய பெயருக்கு எழுதி தரும்படி முத்துலட்சுமியை சரவணன் டார்ச்சர் செய்துவந்திருக்கிறார். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அந்தச் சொத்தை கணவரின் பெயருக்கு முத்துலட்சுமி எழுதி கொடுக்கவில்லை. அதில் ஏற்பட்ட தகராறில்தான் சரவணனை முத்துலட்சுமி கொலைசெய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. விசாரணைக்குப்பிறகு முத்துலட்சுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.