மனிதர்களின் அன்றாடத் தேடல் தளமாக மாறியுள்ளது கூகுள் தளம். உலகின் முக்கிய தினங்கள், முக்கிய நிகழ்வுகள், இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்களின் பிறந்தநாள், நினைவுநாள் என அனைத்துக்கும் கூகுள் தனது லோகாவில் சம்பந்தப்பட்டவர்களை டூடுலாக்கி தனது முகப்புத் தேடல் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் ஜூலை 19-ம் தேதியான இன்று பிரபல மலையாள எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் பாலாமணி அவர்களின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்தை கூகுள் டூடுலாக வெளியிட்டுள்ளது.

பாலாமணி

அவரைப் பற்றிய முக்கியமான 10 தகவல்களைப் பார்ப்போம்:

1. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புன்னயூர் என்னும் ஊரில் உள்ள நால்பாத் என்னும் அவர்களது பூர்வீக இல்லத்தில் 1909-ம் ஆண்டு ஜூலை 19 தேதியன்று பிறந்தார் பாலாமணி. அவர் பிறந்த காலகட்டத்தில் பெண்கள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் நிலை இல்லாததால் வீட்டிலிருந்துக்கொண்டே மலையாளம் மற்றும் சம்ஸ்கிருத மொழிகளை நன்கு கற்றுத் தேர்ந்தார். சிறு வயது முதலே இலக்கிய சூழலில் வளர்ந்து வந்தார். இவரது அண்ணன் நாலாபாத் என். நாராயண மேனன் எழுதிய படைப்புகளின் மூலம் இலக்கியங்களைப் பயின்றார். அவைதான் இவருக்கு எழுதும் ஆர்வத்தையும், ஊக்கத்தையும் அளித்தன. அவரது அண்ணன் நாராயணன் மேனனின் படைப்புகளே பாலாமணி அம்மாவைப் படைப்பாளியாக மாற்றியது எனலாம்.

2. 19-ம் வயதில் பாலாமணிக்கு மலையாளப் பத்திரிகையான மாத்ருபூமியின் நிறுவனர் வி.எம்.நாயருடன் திருமணம் நடைப்பெற்றது. திருமணத்திற்கு பின் பல்வேறு காரணங்களுக்காக அவரும், அவர் கணவரும் கல்கத்தா சென்றார். பின்னர் சில வருடங்களில் மீண்டும் கேரளா திரும்பி தங்கள் எழுத்துப்பணியை மேற்கொண்டனர். தன் கணவருடன் இணைந்து பல படைப்புகளை எழுதினார் பாலாமணி. பல மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார். 1984-ல் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பிரபல மலையாள மற்றும் ஆங்கில எழுத்தாளர் கமலா தாஸ் இவரின் மகள்.

பாலாமணி

3. இவர் தனது 21-ம் வயதில் எழுதிய முதல் கவிதைத்தொகுப்பான கூப்புக்காய் 1930-ம் ஆண்டு வெளிவந்தது. அப்போதைய கொச்சி மன்னர் பரிஷத் தம்புரானிடமிருந்து ‘சாகித்ய நிபுண புரஷ்கார்’ என்ற சிறப்புமிக்க விருதைப் பெற்றதன் மூலம் மலையாள இலக்கிய உலகில் பிரபலமானார்.

4. இந்திய புராணங்களின் தீவிர வாசகரான பாலாமணி, தனது கதைகள் மற்றும் கவிதைகளில் பெண் கதாபாத்திரங்களின் மனப்பான்மையைக் காட்டியிருப்பார். இவரது படைப்புகள் புராணங்களின் கதைகள் மற்றும் குறிப்புகளை ஏற்றுக்கொண்டன. ஆனால் சாதாரண மனிதர்களாக இருந்த பெண்களை சக்திவாய்ந்த நபர்களாக சித்திரித்தன. ஆரம்ப காலத்தில் இவர் எழுதி 1934-ல் வெளியான ‘அம்மா கவிதைகள்’ தாய்மையை ஒரு புதிய வெளிச்சத்தில் வைத்து பெருமைப்படுத்தியது. எனவே இவர் ‘தாய்மையின் கவிஞர்’ என்றும் அழைக்கப்பட்டார்.

5. 1959 முதல் 1986 வரை இவர் எழுதிய கவிதை தொகுதிகள் தொகுக்கப்பட்டு ‘நைவேத்தியம்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. குடும்பிணி, அம்மா,முத்தஸ்ஸி, ஸ்திரீ ஹ்ருதயம், லோகாந்தரங்களில், சொப்பனம், சந்தியா ,மழுவிண்டே கதா, போன்ற இவரின் படைப்புகள் குறிப்பிடத்தகுந்தவை.

6. சமஸ்கிருதத்தில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் இவரது கவிதைகள் முக்கியத்துவம் பெற்றன. கவிதைகளில் நுட்பமான அறிவு,இவரின் எழுத்துநடை ஆகியவை தனித்துவமானவையாகும்.

7. எழுத்தாளர் பாலாமணி அவர்கள் 500 க்கும் மேற்பட்ட கவிதைகள், சிறார் கதைப் புத்தகங்கள் மற்றும் உரைநடை, மொழிபெயர்ப்பு தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். முத்தாச்சி என்ற படைப்புக்காக கேந்தீரிய சாகித்ய அகாடமி விருது, கேரள சாகித்ய அகாடமி விருதுகளை பெற்றவர். இவர் எழுதிய ‘அம்மா’என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் அம்மா என்ற பட்டமும், பேரக் குழந்தைகள் பற்றி எழுதிய முத்தாச்சி என்ற கவிதைத் தொகுப்பு இவருக்கு மலையாள இலக்கியத்தின் பாட்டி என்ற பட்டத்தையும் பெற்றுத்தந்தது.

பாலாமணி

8. இவர் தனது கவிதைகளுக்காக எண்ணற்ற விருதுகளைப் பெற்றவராவார். ஆசான் விருது, சரஸ்வதி சம்மான், வள்ளுந்தோள் விருது, சாகித்ய அகாடமி விருது, லலிதாம்பிகா அம்பர் ஞானம் விருது, எழுத்தச்சன் விருது போன்ற இலக்கியத்திற்காக வழங்கப்படும் அனைத்து விருதுகள் மற்றும் பரிசுகளையும் பெற்றவர் பாலாமணி அம்மா.

9. நாட்டின் சிறப்பு வாய்ந்த, சிறந்த பணிகளுக்காக மத்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய குடியியல் விருதான பத்ம பூஷண் விருதையும் தனது படைப்புகளுக்காக பாலாமணி அம்மா அவர்கள் பெற்றுள்ளார்.

10. மலையாள இலக்கியத்தின் பாட்டி, தாய்மையின் கவிஞர் என்றெல்லாம் அன்புடன் புகழப்பட்ட பாலாமணி அம்மா அவர்கள் தனது 95 வயது வயதில் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 நாள் இவ்வுலகிலிருந்து மறைந்தார். இவரது மறைவையொட்டி முழு அரசு மரியாதையுடன் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் இவரையும், இவரது படைப்புகளையும் கெளரவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் பாலாமணி அம்மாவின் பெயரில் கேரள அரசின் சார்பில் இலக்கியத்தில் சிறந்து விளங்குவோர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.