அமெரிக்காவில் உள்ள தெற்கு டகோடா (South Dakota) மாகாணத்தில் உள்ள சியோக்ஸ் நீர்வீழ்ச்சியில் செவ்வாயன்று டெரெகோ என்ற சக்திவாய்ந்த புயல் வீசியதால் வானம் பச்சை நிறமாக மாறியிருக்கிறது.
இது அங்குள்ள மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அப்போது, வானம் பச்சை நிறமாக மாறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்ககளில் பகிரப்பட்டன. இதுகுறித்து தேசிய வானிலை சேவை (NWS) ஆய்வாளர் ஒருவர் ட்விட்டரில் கூறியது என்னவென்றால், சூரியனின் சிவப்பு ஒளிக் கதிர்கள் புயலில் உள்ள நீர் அல்லது பனியுடன் சேர்ந்து இடியுடன் கூடிய மேகங்கள் பச்சை நிறத்தில் மாறும் என்று கூறியிருக்கிறார்.
240 மைல்களுக்கு மேல் நீண்டு செல்லும் சக்தி வாய்ந்த டெரெகோ புயல் தெற்கு டகோடா மற்றும் சமவெளியின் பிற பகுதிகள் வழியாக நகர்ந்து, மணிக்கு 99 மைல் வேகத்தில் சென்றிருக்கிறது. சமீபத்தில்கூட இரண்டு புயல்கள் டகோடா பகுதியை தாக்கியிருந்திருக்கிறது. அப்பகுதி மக்களுக்கு புயல் என்பது பழக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் வானம் பச்சை நிறத்தில் மாறியது தான் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.