கோபம் என்ற சிறிய தீ தன் நாக்குகளால் ஓர் உயிரை பலி வாங்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள கண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் உமேந்தர் (33). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சமீபத்தில் இவர் தன் குடும்பத்தினருடன் சென்னையை அடுத்த முட்டுக்காட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
பின்னர், மாமல்லபுரம் அருகிலுள்ள மாலிலுள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, மாலையில் வீடு செல்வதற்காக ஆன்லைனில் வாடகை கார் புக் செய்துள்ளார். காரில் ஏறிய அவர் ஓடிபி எண்ணைச் சொல்லாததால் அவருக்கும் ஓட்டுநர் ரவி என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவரைத் தாக்கினர். தாக்கப்பட்ட உமேந்தர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். கோபம் மற்றும் ஈகோ முன்பின் தெரியாத ஒரு நபரையே கொலை செய்யும் அளவுக்குச் சென்றிருக்கிறது. சகிப்புதன்மை இல்லாதது, பொறுமையின்மை என இதற்கு எந்தப் பெயர் வேண்டுமானலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன என்பதுதான் கவலை கொள்ளச் செய்யும் விஷயம்.
கோபம், ஈகோ இரண்டும் எத்தனை அபாயகரமானது, அதுபோன்ற நேரங்களில் மனதைக் கட்டுப்படுத்துவது பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் லட்சுமி பாய்.
“நம்மில் பல பேருக்கு மனநலப் பிரச்னைகள் இருக்கும். சிலருக்கு வெளிப்படையாகத் தெரியும். சிலருக்கு பாதிப்பு இருப்பது வெளிப்படையாகத் தெரியாது. மீறித் தெரிந்தாலும் அதை வெளியில் சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை. குடும்பத்தில் இருப்பவர்களும் அதை சகித்துக்கொள்வார்கள்.
உதாரணத்துக்கு, கோபம் வந்தால் வீட்டில் இருப்பவர்களிடம் காட்டுவது, அவர்களை அடிப்பது, கத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். பாதிப்பு இருக்கிறது என்று வெளியப்படையாகத் தெரியும் பட்சத்தில் மனநல மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை, கவுன்சலிங் பெற வேண்டும்.
பார்டர்லைன் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் (பிபிடி) என்பது நிலையற்ற மனநிலை என்ற பிரச்னை. அதாவது நடத்தை மற்றும் உறவுகளை பாதிக்கும் ஒரு நிலை. இந்த நிலையில் இருப்பவர்கள் ஒரு நபரைத் தாக்கும் அளவுக்குச் செல்வார்கள். இந்த நிலையில் இருப்பவர்கள் சட்டென்று கோபம் கொள்பவர்களாக இருப்பார்கள். சிறிய விஷயத்துக்குக்கூட கோபம் வந்துவிடும். அதுபோன்ற நேரத்தில் எதிரில் உள்ளவர்களை அடிப்பார்கள், இல்லை தன்னைத் தானே துன்புறுத்திக்கொள்வார்கள்.
இவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இந்தப் பிரச்னையைப் புரிந்துகொண்டு ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று மருந்துகளும் எடுத்துக்கொண்டால் பாதிப்பை நிச்சயம் குறைக்கலாம்.
இந்தச் சம்பவம் பொதுவெளியில் நடந்ததால் நமக்குத் தெரிகிறது. இன்னும் பல சம்பவங்கள் நமக்குத் தெரியாமலே இருக்கின்றன. அவனுக்கு இதே வேலை, அவன் கோபக்காரன் என்றோ சொல்லி குடும்பத்தினரும் நண்பர்களும் அலட்சியமாக விட்டுவிடுகிறார்கள்.
மனஅழுத்தத்தில் இருப்பவர்களுக்கும் சட்டென்று கோபம் வரும். கோபம் வரும்போது உடம்பிலுள்ள 18 தசைகளும் இறுகிப் போய்விடும். தசைகளின் இறுக்கம் நரம்புகளைக்கூட பாதிக்கும். அது போன்ற சமயத்தில் ஒரு நிமிடம் ஆழ்ந்து மூச்சுக் காற்றை இழுத்து வெளியில் விட்டால் தசைகள் தளர்ந்து மனதும் அமைதியடையும். Silence is powerful. இரண்டு நிமிடம் அமைதியாக இருந்தால் பெரிய பெரிய விளைவுகளைக்கூடத் தவிர்க்கலாம். மனஅழுத்தம் தொடர்ந்தால் மனச்சோர்வாக மாறும். எனவே, தொடர் மனஅழுத்தத்தையும் நிபுணர் உதவியுடன் நிர்வகிக்க வேண்டும். மனநலம் சார்ந்த பிரச்னைகள், மனஅழுத்தம் என எந்தக் காரணமும் இல்லாமல் அடிக்கடி கோபமடைந்தாலும் உளவியல் ஆலோசகரை அணுகுவது நல்லது” என்றார்.