பஞ்சாப் மாநில பாடகர் சித்து மூஸ்வாலா என்ற சுப்தீப் சிங் சித்து (28,) கடந்த மே மாதம் 29-ம் தேதி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் பிப்ரவரியில் மான்சா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இந்தப் படுகொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் கொலைக்கு கேங்க் வார் காரணமாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் பகுதியில் அமைந்துள்ள பிபி-217 தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பரப்புரை சுவரொட்டியில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, மற்றும் மூஸ் வாலாவின் புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. அந்த போஸ்டரில் மூஸ் வாலாவின் பிரபலமான எண்ணைக் குறிக்கும் வகையில் “295” என்ற எண்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
மூஸ் வாலா-வின் புகைப்படம் போஸ்டரில் இருப்பதால் அந்த போஸ்டர் இந்தியாவிலும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவரின் ஆதரவளர்களிடம் கேட்கப்பட்டபோது, “சித்து மூஸ் வாலாவின் புகைப்படத்தால் இந்த போஸ்டர் மிகவும் வைரலாகியுள்ளது. அவரின் படத்தை போஸ்டரில் அச்சிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் போஸ்டர்கள் எதுவும் இதற்கு முன் இவ்வளவு வைரலாகியதில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
மூஸ் வாலா பாக்கிஸ்தானில் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர். அவர் இறப்பதற்கு முன், லாகூர், இஸ்லாமாபாத்தில் நேரடி நிகழ்ச்சிகளுடன் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக ரசிகர்களுக்கு உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.