மெதுவாக ஒரு வேலையை செய்தாலோ அல்லது சோம்பேறித்தனமாக இருந்தாலோ பொதுவாக அவர்களை ஆமையுடன் ஒப்பிட்டுக்கூறுவர். ஆனால் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுகிற ஆமைகள் பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உலகெங்கிலும் காணப்படுகிற ஊர்வன இனத்தை சேர்ந்த ஆமைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. நீர் மற்றும் நிலத்தில் வாழ்கின்ற பல அரிய வகை ஆமைகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.
ஆமைகளின் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் உலக ஆமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே, 23ஆம் தேதி ஆமைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆமைகளை அன்பாக பாதுகாப்பதை மையமாகக் கொண்டு “Shellebrate” என்ற பெயரில் ஆமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆமைகள் தினம் உருவான கதை உங்களுக்குத் தெரியுமா?
அமெரிக்க ஆமைகள் மீட்பு (American Tortoise Rescue) மையம் இதற்கு தொடக்கப்புள்ளி வைக்கவில்லை என்றால் உலக ஆமைகள் தினம் என்ற ஒன்றே இருந்திருக்காது. இந்த லாப நோக்கற்ற அமைப்பு 1990ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சூசன் டெல்லம் அம்ற்றும் அவரது கணவர் மார்ஷல் தாம்சன் என்பவர்களால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இவர்கள் நீர் மற்றும் நிலத்தில் வாழ்கின்ற 4000க்கும் மேற்பட்ட ஆமைகளை மீட்டு அவைகளுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். அதன்பிறகு 2001ஆம் ஆண்டிலிருந்து உலக ஆமைகள் தினத்தை கொண்டாடிவருகிறது. இந்த ஆண்டு 22வது உலக ஆமைகள் தினமாக கொண்டாப்படுகிறது.
இதுகுறித்து சூசன் டெல்லம் கூறுகையில், ’’பொதுவாக ஆமைகள் காட்டுப்பகுதிகளில்தான் வாழ்கின்றன என பலர் நினைக்கின்றனர். ஆனால் நிஜத்தில் அது சாத்தியமில்லை. பல ஆமைகள் செல்லப்பிராணிகள் கடைகளில் விற்கப்படுகின்றன. சிலர் போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு ஆமைகளை பரிசாகவும் அளிக்கின்றனர். தற்போது நிறைய ஆமை மீட்பு மையங்கள் மற்றும் சரணாலயங்கள் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. சிலர் வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர்’’ என்கிறார் அவர்.
இந்தியாவிலும் ஆமைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ஆமைகள் தினத்தை முன்னிட்டு அழிந்துவரும் ஆமையினங்களைச் சேர்ந்த 300 ஆமைகள் உத்தரபிரதேசத்தில் உள்ள சம்பல் ஆற்றில் விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிவப்பு கிரீடம் கொண்ட ஆமை குஞ்சுகள், மூன்று கோடுகள் கொண்ட ஆமைகள் போன்ற அரியவகை ஆமைகள் ஆற்றில் விடப்பட்டுள்ளன. சர்வதேச ஆமைகள் பாதுகாப்பு அமைப்பான Turtle Survival Alliance மற்றும் முன்னணி ஆடை நிறுவனமான Turtle Limited ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆமைகள் பற்றிய அரியத் தகவல்கள்
- முட்டையிட்டு குஞ்சுபொரிக்கும் வகையைச் சேர்ந்தவை இந்த ஆமையினங்கள். ஒரே நேரத்தில் 200 முட்டைகளைக்கூட இடக்கூடிய வலிமை வாய்ந்தவை கடல் ஆமைகள். நீரில் வாழும் ஆமை கர்ப்பமுற்றவுடன் அவை கரைப்பகுதிக்கு வந்து அங்கு குழிதோண்டி முட்டைகளை இட்டுச்செல்லும்.
- இந்திய கடற்கரை பகுதிகளில் பெருந்தலை ஆமைகள் முட்டையிடுவதில்லை. மற்றவகை ஆமைகள் நவம்பர் – ஏப்ரல் காலகட்டங்களில் இந்திய கடற்கரை பகுதிகளில் முட்டையிடுகின்றன.
- நிலத்தில் வாழும் ஆமைகள் ஊர்ந்துசெல்வதற்கு ஏதுவாக கால்களில் நகங்கள் இருக்கிறது. அதேசமயம் நீரில் வாழும் ஆமைகளுக்கு கால்களே அவைகள் நீந்துவதற்கு ஏற்றவாறு துடுப்புபோல் செயல்படுகின்றன.
- நிலத்தில் வாழும் ஆமைகளைவிட நீரில் வாழும் ஆமைகள் பெரும்பாலும் உருவத்தில் பெரிதாக இருக்கின்றன. அதாவது 900கி.கிராம் வரை வளரக்கூடிய இனங்களும் கடலில் இருக்கின்றன.
- மணிக்கு சுமார் 70 மீட்டர்தூரம் வரை மட்டுமே ஊர்ந்துசெல்லக்கூடிய ஆமைகளின் இதயம் மெதுவாகத் துடிக்கின்றது. இதனால் இதன் ஆயுட்காலமும் அதிகம்.
- உலகிலேயே ஸ்டிங்காட் என்ற ஆமைதான் மிகச்சிறிய ஆமைவகையாகும். இது 110மி.மீ மட்டுமே வளரக்கூடியவை.