மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறியதால் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்ற நேற்று மாலை வந்திருந்தார் துர்கா ஸ்டாலின்.
தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று வழிபட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் துர்கா ஸ்டாலின், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சவுமியநாராயணப் பெருமாள் கோயிலுக்கு சிறப்பு பூஜை செய்ய தன் உறவினர்களுடன் வந்தார்.
கோயில் பட்டாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க சிவகங்கை தேவஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டும் என ஏற்கெனவே மூன்று முறை இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொண்டதாகவும், தற்போது அந்த வேண்டுதல் நிறைவேறியதால் நான்காவது முறையாக வருகை புரிந்ததாகவும் கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.
குடும்பத்தினர் அனைவர் பெயருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து சவுமியநாராயணபெருமாள் கோயில் அஷ்டாங்க விமானத்துக்கு செப்பு தகட்டில் தங்கத்தகடு பொருத்தும் பணியை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் சயன கோலத்திலுள்ள மூலவர், தாயார், ஆண்டாள், ராமானுஜர், திருக்கோஷ்டியூர் நம்பிகள் சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். தேரில் எழுந்தருளிய உற்சவரை தரிசனம் செய்தார். சிவகங்கை எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வந்திருந்த கட்சி நிர்வாகிகள் ஸ்டாலினுக்கு மரியாதை அளித்தனர்.