ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணத்தை உலகமே உற்று நோக்குகிறது.
இந்தச் சுற்று பயணத்தின் முதற்கட்டமாக, மோடி பெர்லினில் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா, ஜெர்மனி இடையிலான வர்த்தகம் மற்றும் ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த முக்கிய விஷயங்கள் அவர்களின் விவாதத்தில் இடம்பெற்றன.
இந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் மோடி வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள், “2024- மோடி ஒன்ஸ்மோர்” என உற்சாகம் முழக்கங்களை எழுப்பி பிரதமரை வரவேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய மோடி, “எனது நாட்டு குழந்தைகளை பெர்லினில் சந்திப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் இருந்து பெர்லினுக்கு வந்திருக்கிறீர்கள்” என்றார்.
“ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு அமைதிப்பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு. இந்த போரில் யாரும் வெல்லப்போவது கிடையாது. இந்தியா அமைதியையே விரும்புகிறது.”
“உக்ரைன், ரஷ்யா மோதலால் கச்சா எண்ணெய் விலை மிகவும் உயர்ந்திருக்கிறது .இதனால் அத்தியாவசியப் பொருள்கள், உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது.”
ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து மோடி இன்று டென்மார்க் புறப்பட்டு சென்றார். அங்கு அந்நாட்டு பிரதமர் மிட்டீ ஃபிரிடிக்சனை சந்தித்து வருகிறார்.