டெக் உலகின் ஜாம்பவான் பில் கேட்ஸ் அவரின் முன்னாள் மனைவி மெலிண்டா குறித்தும் அவர்களது திருமண முறிவு குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு உணர்ச்சிபூர்வமாக பதிலளித்துள்ளார். இருவருக்கும் திருமணம் நடந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வருடம் மே 2021 பரஸ்பரம் இருவரும் பிரிய இருக்கும் முடிவை அறிவித்தனர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் – ஜென்னர் (Jenner), ரோரி (Rory), பிபி (Phoebe).
ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் தன் முன்னாள் மனைவி மெலிண்டாவையே மீண்டும் திருமணம் செய்ய விரும்புகிறாராம் பில் கேட்ஸ். Sunday Times தளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கடந்த இரண்டு வருடங்கள் `சிறிது நாடகத்தன்மையோடு’ கழிந்ததாகவும் `வருந்தத்தக்க பகுதி’ என்னவென்றால் குழந்தைகள் அவரைப் பிரிந்து சென்றதுதான் என்கிறார் பில் கேட்ஸ்.
எல்லாத் திருமணங்களும் மாற்றங்களுக்கு உட்பட்டவையே, குழந்தைகள் வளரும்போது வீட்டை விட்டுச் செல்லும் போது என மாறிக்கொண்டே இருக்கும். பில் கேட்ஸ்க்கு இந்த விவாகரத்து `ஒருவகையான மாற்றம்’ என்கிறார். இருந்தபோதிலும் அவரைப் பொறுத்த வரை இது ஒரு சிறப்பான திருமண வாழ்க்கை.
“நான் மாற்ற விரும்பவில்லை. வேறு ஒருவரை ஒருபோதும் திருமணம் செய்துகொள்ளப் போவதும் இல்லை. இன்னொரு முறை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் நான் மெலிண்டாவையே திருமணம் செய்துகொள்ள விரும்புவேன். எனக்குத் திட்டங்கள் எதுவுமில்லை, ஆனால் திருமணத்தை நான் முழுமையாகப் பரிந்துரைக்கிறேன்.”
எப்போது மணமுறிவு முடிவுக்கு அவர் வந்தார் என்பது குறித்து இப்போது வரைக்கும் அவரால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இருவரும் இணைந்து நடத்துகின்றனர். அதனால் தான் ‘லக்கி’ என்கிறார் பில் கேட்ஸ். இருவரும் ஒன்றாக இணைந்து ஆண்டுக் கூட்டங்களை ஜூனில் நடத்தவிருக்கிறார்கள்.