இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் நேற்றிரவு வாட்ஸ்அப் செயலி சிறிது நேரம் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியின் சேவை நேற்றிரவு திடீரென செயல்படாமல் போனது. வாட்ஸ்அப் இயங்கவில்லை என்று இரவு 9.15 மணியளவில் அந்நிறுவனத்தின் கவனத்திற்கு வந்தது. அடுத்த 45 நிமிடத்திற்குள் சுமார் 30 ஆயிரம் பேர் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியவில்லை என்று பயனர்கள் தெரிவித்தனர். குறிப்பாக இந்தியாவில் சுமார் ஒரு மணி நேரம் வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் அதனை பயன்படுத்துவோர் தவித்தனர். வாட்ஸ்அப்பில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து டிவிட்டரில் வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், சேவையில் சிக்கல் இருப்பதை ஒப்புக்கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம், பிரச்னைகளை சீர் செய்துவிட்டதாகவும், இதுவரை பொறுமை காத்ததற்காக பயனர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு, வாட்ஸ் ஆப் சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த நேரத்தில் சாட்டிங் செய்ய முடியாமலும், வீடியோ கால் பேச முடியாமலும் பலரும் தவிப்புக்கு ஆளாகினர்.
இதையும் படிக்கலாம்: “எங்களுக்கு பயம் இல்லை” – ரயில்வே மின்கம்பிகளை பராமரிக்கும் ஜப்பான் ரோபோ