40 ஆண்டுகாலமாகத் தமிழ்த் திரைத்துறையில் தனது இசையால் ஆதிக்கம் செய்த இளையராஜாவுக்கு எதிராக இத்தனை விமர்சனங்கள் எழுவது இதுவே முதல்முறை என்று வருத்தப்படுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
“மோடியை புகழ்வது அவரது உரிமை என்றாலும், அம்பேத்கருடன் மோடியை ஒப்பீடு செய்ததுதான் தவறு” என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துவந்த நிலையில், பாஜகவின் அகில இந்தியத் தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்ட அறிக்கையில் “இந்தியாவின் மூத்த இசைமேதையாக உள்ள இளையராஜாவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவது தமிழகத்தில் ஆளும்தரப்பிற்கு நெருக்கமானவர்கள் வசைப்பாடுவது சரியா” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு தி.மு.க சார்பில் ஆர்.எஸ் பாரதி தரப்பிலிருந்து பதிலும் கொடுக்கப்பட்டது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இளையராஜா எந்தக் கட்சியையும் சேர்ந்தவரல்ல. அவர் மக்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவர் அவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இளையராஜா விவகாரம் அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. உண்மையில் இளையராஜா விவகாரத்தில் நடந்தது என்ன என்று பாஜக தரப்பில் விசாரித்தோம். அவர்கள் கூறியதாவது “இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் பாஜகவில் இணைந்தபோது அதை வரவேற்றிருக்கிறார் இளையராஜா. அதன்தொடர்ச்சியாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் இளையராஜாவை நேரடியாகச் சந்தித்தார் கங்கை அமரன். அப்போது கட்சி சார்ந்த சில கருத்துப் பரிமாற்றங்களும் நடந்திருக்கிறது.
சமீபத்தில் துபாய் நாட்டில் எக்ஸ்போவைக் காண இளையராஜா சென்றார். துபாயில் ரஹமானின் இசைகூடத்திற்கு சென்று பார்வையிட்டார்.விரைவில் அந்த ஸ்டூடியோவில் இசை கோர்வை ஒன்றை நடத்தத் தயார் என்றும் அறிவித்தார் இளையராஜா. இதே நேரம் “அம்பேத்கார் அன்ட் மோடி” என்கிற புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். துபாய் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தபிறகுதான் அவர் மோடி குறித்த தனது கருத்தியலில் மிகவும் உறுதியாக இருந்தார்” என்கிறார்கள்.
புத்தகத்திற்கு எதிரான விமர்சனங்கள் கிளம்பியதுமே தனது தம்பி கங்கை அமரனிடம் இதுகுறித்து கலந்தாலோசித்தாக கூறப்படுகிறது. அவரும் அந்தத் தகவலை பாஜக கட்சி தலைமையிடம் சொல்லியுள்ளார். டெல்லிக்கு இந்த தகவல் சொல்லப்பட்டதும், மோடியின் அலுவலகத்திலிருந்து சில தகவல்கள் வந்துள்ளது. குறிப்பாக கங்கை அமரனிடம் இளையராஜா குறித்த சில தகவல்களை டெல்லி மேலிடம் சொல்லியுள்ளது. இதன்பிறகே “மோடி விவகாரத்தில் தனது கருத்தில் எந்த மாற்றத்தினையும் செய்ய முடியாது என்று இளையராஜாவும் மல்லுக்கட்டினார்” என்கிறார்கள் பாஜகவினர்.
மற்றொருபுறம் வரும் எப்ரல் 24-ம் தேதியோடு ராஜ்யசபாவில் நியமன எம்.பிக்கள் ஏழுபேரின் பதவிக் காலம் முடிவடைகிறது. அதில் கலைத்துறை சார்பில் ஒருவரை குடியரசு தலைவர் நியமனம் செய்யலாம். அந்த அடிப்படையில் இளையராஜாவின் பெயரை டெல்லி பாஜக தலைமை குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்ப முடிவெடித்துள்ளது. ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி மொழிக்கு எதிராக தமிழணங்கு பதிவு போட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படடுத்தியது. மற்றொரு புறம் மோடிக்கு எதிராக தமிழகத்தில் நடந்துவரும் எதிர்பு பிரசாரங்களை முறியடிக்கவும் இளையராஜாவை பயன்படுத்த பாஜக தலைமை முடிவெடுத்துள்ளது.
ரஹ்மானின் ஆக்ஷனுக்கு ரியாக்ஷனை பாஜக கையில் எடுக்க ஆரம்பித்துள்ளது. அண்ணாமலையோ இளையராஜாவுக்கு பாரத ரத்னாவே கொடுக்கலாம் என்று பாரத்ரத்னா விருது வாங்க மோடியை புகழ்ந்தால் போதும் என்கிற வகையில் கருத்து சொல்லியுள்ளார். துபாய் பயணத்திற்கு பிறகு எழுந்த சில நெருக்கடிகளும், அதை வைத்து தம்பியின் அரசியல் தூதின் பலனால் இனி இசைஞானி இளையராஜா எம்.பியாக இளையராஜாவாகக் கூட வலம் வர வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் ராஜாவிற்கு நெருக்கமானவர்கள்.