எதிர்பார்க்கறது நடந்தா சந்தோஷம், நடக்கலைனா பல ரசங்கள், வருத்தம், வன்மம், துக்கம், அழுகை, பொறாமை, கோபம், வெறுப்பு, ஒரவஞ்சனை, தனிமை, பல விதமான மிருகங்கள் நம்முள் வந்து போகும். ஒரு வேளை எதிர்பார்த்தது நடக்காம போனா, அது நமக்கு வருத்தம். ஆனா, நம்மோட தோல்வி அடுத்தவனுக்கு வெற்றி, அப்போ அவனோட எதிர்பார்ப்பு சந்தோஷம். நமக்கு, நடக்கற எல்லா நிகழ்விலும் நாம எதிர்பாக்கறது நடக்கவும் செய்யலாம்; நடக்காமலும் போகலாம். ஆனா, எதிர்பார்ப்பு இருந்துகிட்டே இருக்கும். ஏன்னா, எதிர்பார்ப்புதானே வாழ்க்கை நகர்த்தலுக்கான எரிபொருள்!
பசில நடக்கும் போது, கீழ நூறு ரூபா பணம் கிடைச்சா, அது எதிர்பார்க்காத சந்தோஷம், அதுவே, ’கீழ நூறு ரூபா கிடைச்சா நல்லா இருக்கும், பசிக்குதே’ அப்படின்னு போன, ஒரு ரூபா கூட கிடைக்கா. எதிர்பார்த்து போனா எல்லாம் நேரமும் எல்லாம் கிடைக்கும்னு அவசியம் இல்ல. எதிர்பார்க்காம போனா எல்லாம் கிடைக்கும்னு நிச்சயமும் இல்ல. ஆனா, எதிர்பார்க்காத மனிஷனே இந்த உலகத்துல இல்ல. Expectation kills அப்படின்னு சொன்ன அந்த பெயர் தெரியாத மனுஷனோட எதிர்பார்ப்பே, யாரும் எதிர்பார்க்காதீங்கன்னு சொல்றதுதான்!
கோயிலுக்குப் போறோம், சாமிக்கு நன்றி சொல்ல யார் போறா? எதிர்பார்ப்பே இல்லாம கோயிலுக்கு போற ஓர் ஆள்கூட இந்த உலகத்துல இல்ல. சாமி நம்பிக்கை எப்ப வரும்னா, பணக் கஷ்டம், குடும்பக் கஷ்டம், உடம்பு சரியில்ல, விபத்துல சிக்கிக் கஷ்டப்படறவங்க, குழந்தை பொறக்கற அப்போ, சாகப் போற அந்த நொடி… இப்படித்தானே?
நிலவை காமிச்சு சோறு ஊட்டற அம்மா, அந்த கை குழந்தைகிட்டே சொல்லற கதைகூட, அந்தக் குழந்தைக்கு எதிர்பார்ப்புதான்… ’நீ சாப்பிட உடனே, அம்மா உனக்கு சாக்லேட் தரேன், சாப்பிடு’. குறை சொல்ல வரும் சொந்தங்கள்கூட, ’எங்க அக்கா பையன் நாலு மாசத்துல ABCD சொல்றான், ஸ்லோகம் சொல்லறான். ஆமா, உங்க பொண்ணுக்கு எண்ண வயசாச்சு?’ அப்படின்னு சொல்லி, அப்போதான் ’அம்மா’ சொல்லத் தொடங்கும் குழந்தைகிட்ட போய், ’நீ ABCD சொல்லு’ன்னு எதிர்பாக்கற உலகம்!
குழந்தைக்கு, நிறையா அன்பு வேணும், கூடவே எப்போதும் விளையாடணும்கிற எதிர்பார்ப்பு, ஸ்கூல் பசங்களுக்கு, மழை வரணும்னு எதிர்பார்ப்பு. முதல் மார்க் வாங்கறவனுக்கு எப்பவும் ஃபர்ஸ்ட் மார்க்தான் வரணும்கிற எதிர்பார்ப்பு, ஃபெயில் ஆகுறவனுக்கு பாஸ் ஆனா போதும்னு ஓர் எதிர்பார்ப்பு, காலேஜ் பசங்களுக்கு அழகான பொண்ணு வரணும்னு எதிர்பார்ப்பு, மெக்கானிக்கல் பசங்களுக்கு ஒரு பெண்ணாவது வராதான்னு எதிர்பார்ப்பு, லவ் சொல்றப்போ ஏத்துக்கணும்னு எதிர்பார்ப்பு. கடைசி வரைக்கும் நம்பள மட்டும்தான் லவ் பண்ணனும் நினைக்கறதுகூட ஓர் எதிர்பார்ப்புதானே? போற வேலை கிடைக்கும்னு எதிர்பார்ப்பு. வேலைக்குப் போறப்போ சம்பளம் நிறைய வரணும்னு எதிர்பார்ப்பு, வீடு ஓனர்க்கு, வாடகை சரியா வருமான்னு எதிர்பார்ப்பு. அம்மா, அப்பாக்கு நாம சொல்லற பொண்ணை, பையனை கல்யாணம் பண்ணனும்னு எதிர்பார்ப்பு, கடன் தர்றவனுக்கு, இவன் திருப்பித் தருவானான்னு தர்ற வரைக்கும் எதிர்பார்ப்பு. கடன் கேக்கறப்போ, இவங்ககிட்ட கேட்டா தருவாங்களானு எதிர்பார்ப்பு. வேலை செஞ்சா, கஸ்டமர் பணம் தருவாரானு எதிர்பார்ப்பு, கஸ்டமருக்கோ இவர் கொடுத்த காசுக்கு வேலை செஞ்சு தருவாரானு எதிர்பார்ப்பு. பொண்ணு தரவங்களுக்கு நம்ம பொண்ண நல்லா பாத்துக்கணும்னு எதிர்பார்ப்பு, வர்ற பொண்ணு நம்ம குடும்பத்தை நல்லா பார்த்துக்கணும்னு பையனோட எதிர்பார்ப்பு.
திருடனுக்கு மாட்டிக்காம திருடணும்னு எதிர்பார்ப்பு, போலீஸுக்கு திருடன் மாட்டணும்னு எதிர்பார்ப்பு. மக்களுக்கு நல்ல தலைவன் வேணும்னு எதிர்பார்ப்பு, தலைவனுக்கு சொல்லற பேச்சை கேக்கற மக்கள் வேணும்னு எதிர்பார்ப்பு. கடைல வாங்கற பொருள் நல்லா இருக்குமானு நினச்சுகிட்டே எப்போதும் ஒரே கடைல வாங்கறதுகூட எதிர்பார்ப்புதான், சாப்பட்றப்போ கூட, நல்லா சாப்பிடணும்னு எதிர்பார்ப்பு. உள்ள போற சாப்பாடுகூட, நல்லா செரிமானம் ஆகணும்னு எதிர்பார்ப்பு. கல்யாணம் ஆச்சுன்னா குழந்தைக்கு எதிர்பார்ப்பு, அதே குழந்தை எப்படா வளரும்னு எதிர்பார்ப்பு. வளர்ந்தா, மறுபடியும் குழந்தையா ஆகாதுன்னு எதிர்பார்ப்பு. சிலருக்கு, சிலர் நல்லா இருக்கணும்னு எதிர்பார்ப்பு, சிலருக்கு சிலர் நல்லா இருக்கக்கூடாதுனு எதிர்பார்ப்பு. சொத்து பிரிச்சா, நமக்கு எவ்ளோ தேறும்னு நினைக்கறது ஓர் எதிர்பார்ப்பு. முடியாம படுத்துட்டா, எப்படா சாகப்போறம்னு எதிர்பார்ப்பு, அந்த நொடி வரப்போ சாகக்கூடாது… நான் வாழணும்னு எதிர்பார்ப்பு. செத்துப்போனா கூட, இவங்க திரும்ப இதே வீட்டுல பொறக்கணும் ஆசைப்படறது கூட ஒரு எதிர்பார்ப்புதான்.
ஆக மொத்தம், பிறந்தாலும் எதிர்பார்ப்பு, வாழ்ந்தாலும் எதிர்பார்ப்பு, இறந்தாலும் எதிர்பார்ப்பு. இறந்த பிறகும் எதிர்பார்ப்பு!
வாழ்க்கையோட சுவாரஸ்யமே, அடுத்த நொடி என்னன்னு தெரியாம, எதிர்பார்த்துக் காத்துகிட்டு இருக்கறதுதான். ஆனா, யாரவது கேட்டா, நான் எதிர்பார்க்கலையேன்னு சொல்லிக்கிட்டே, எதையாவது எதிர்பார்க்கறதுதான்!
எதிர்பார்த்துகிட்டே இருந்தா, எதுவும் நடக்காது. எதிர்பார்க்காமலே இருந்தாலும் நடக்கறத நிறுத்த முடியாது. அதனால, நாம நம்ம வேலைய உண்மையா, எதிர்பார்ப்போட செஞ்சுக்கிட்டே இருப்போம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாம. எதிர்பாராததை எதிர்பாருங்கள், அதுதான் வாழ்க்கை. இப்போ இதை எழுதறது கூட ஓர் எதிர்பார்ப்போடதான்!
Expectation is a fuel for life
– கல்யாணராமன் நாகராஜன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.