கடந்த பிப்ரவரி மாதம் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தது.
கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் கடந்த மாதம் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இலங்கை மதிப்பில் தலா 2 கோடி பிணைத் தொகை கட்டிவிட்டு மீனவர்களை மீட்டுக் கொள்ளுமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து மேலும் 20 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
இந்த விவகாரத்தில் இலங்கை நீதிமன்றத்தைக் கண்டித்தும், பிணையத் தொகை கட்டாமல் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேஸ்வரத்தில் நாளை மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.
அதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் மீனவர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில், இலங்கை நீதிமன்றம் இன்று 19 தமிழக மீனவர்களை விடுவித்துள்ளது. இதேபோல மீதமுள்ள 13 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக ஆட்சியரிடம் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மீனவர் சங்க பிரதிநிதி சேசுவிடம் பேசினோம்.
“இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் தலா 2 கோடி ரூபாய் வீதம் 24 கோடி பிணையத்தொகை கேட்டதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம். இந்நிலையில் இன்று 19 மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது எங்களுக்குச் சற்று ஆறுதலாக உள்ளது. தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் மீதமுள்ள 13 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால் எங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து வருவது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்த மீன்பிடி தடை காலத்தின்போது இருநாட்டு மீனவர்களையும் அழைத்து மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும். மீன்பிடி தடை காலத்திற்குப் பிறகு தமிழக மீனவர்கள் எந்தவித அச்சமுமின்றி கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை இந்த அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.