எத்தனை போன் நம்பர் இருந்தாலும் இனிமேல் ஒரே ஸ்மார்ட்போனில் அதை பயன்படுத்தலாம் என்ற வசதி விரைவில் வரப்போகிறது. இந்த சேவை வசதியுடன் `ஆண்ட்ராய்டு 13’ சந்தைக்கு வரவுள்ளது.
கூகுள் நிறுவனம் சார்பில் இந்த வருடத்தின் இறுதியில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை வெளியிடவுள்ளது. இந்த `ஆண்ட்ராய்டு 13’ இயங்குதளத்தில், புதிதாக சேர்க்கப்படவுள்ள MEP எனப்படும் வசதியைப் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி `இப்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான போன்களில் டூயல் சிம் வசதி மட்டுமே இருக்கிறது.
ஆண்ட்ராய்டு போன்களில் இரண்டு சிம்கார்டுகளை மட்டுமே ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். ஐபோன்களிலும்கூட ஒரு சிம் கார்டு; மற்றொன்று இ-சிம் கார்டு என்றே இருந்தது வந்தது. பின் அது சில வருடங்களுக்கு முன்பு டூயல் சிம் வசதி கொண்டு வரப்பட்டது. ஆனால் இரண்டுக்கும் மேற்பட்ட போன் நம்பர்கள் இருந்தால் ஒரு சிம்மை மாற்ற வேண்டியிருக்கும் அல்லது புதிய மொபைல் தேவைப்படும்.
இவை அனைத்திலிருந்தும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் மாறுபடும். அந்தவகையில் தற்போது ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் கொண்டு வரப்படவுள்ள MEP வசதியால் இனிமேல் எத்தனை போன் நம்பர்களை வேண்டுமானாலும் ஒரே ஸ்மார்ட்போனில் பயன்படுத்திக் கொள்ளலாம். Multiple Enabled Profiles எனப்படும் இந்த வசதிக்குக் கடந்த 2020-ம் ஆண்டே காப்புரிமை வாங்கி வைத்திருக்கிறது கூகுள் நிறுவனம்.
ஆனால் இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயமொன்று உள்ளது. அதாவது இப்போது பயன்பாட்டில் இருக்கும் வழக்கமான சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் போன்களில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்திற்கு அப்டேட் செய்தாலும் இந்த புதிய வசதி செயல்படாது. ஏனெனில் MEP தொழில்நுட்பம் இ-சிம் கார்டை அடிப்படையாக வைத்து செயல்படக் கூடியது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு ஸ்மார்ட்போனில் புதிய போன் நம்பரை மொபைலில் சேர்க்க சிம் கார்டு தேவையிருக்காது.
ஒரே இ-சிம்மை பயன்படுத்தி எத்தனை போன் நம்பர்களை வேண்டுமானாலும் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். வரும்காலத்தில் இந்த தொழில்நுட்பம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றால் சிம் கார்டுகளின் தேவை வெகுவாக குறையும்’ என்று தெரிகிறது.
– மு.ராஜேஷ் முருகன்
சமீபத்திய செய்தி: வந்துவிட்டது அடுத்த கொரோனா திரிபு… இந்தியாவிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் ‘XE’ உறுதி