கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), மருத்துவம் மற்றும் பொறியியலை இணைக்க சுமார் 1 மில்லியன் சதுர அடி பரப்பளவில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியைத் திறப்பதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. இதன் மூலம் பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பல்துறைகளை இணைக்க திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று கூறியிருந்தது ஐஐடி-கான்பூர்.
இந்நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸின் இணை நிறுவனர் மற்றும் கான்பூர் ஐஐடி-யின் முன்னாள் மாணவருமான ராகேஷ் கங்வால், ஐஐடி கான்பூர் தொடங்கியுள்ள இந்த மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியை உருவாக்கும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரூ.100 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இது குறித்து பேசிய கான்பூர் ஐஐடி- இயக்குநர் அபய் கரண்டிகர் (Abhay Karandikar), “இண்டிகோ ஏர்லைன்ஸின் இணை நிறுவனரும் எங்கள் முன்னாள் மாணவருமான ராகேஷ் கங்வால், ஐஐடி கான்பூரில் உள்ள மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியை ஆதரிப்பதில் கவனம் செலுத்தி ரூ.100 கோடி தனிப்பட்ட முறையில் நன்கொடையாக அளித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.