பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் பெறும் ஒன்றுக்கு மேற்பட்ட ஓய்வூதியங்களை அம்மாநில முதலமைச்சர் பகவந்த் சிங் மான் ரத்து செய்துள்ளார்.
பஞ்சாப்பில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒருவர் எத்தனைமுறை எம்எல்ஏவாக இருந்திருந்தாலும் அவரது ஒரு பதவிக்காலத்திற்கு மட்டுமான ஓய்வூதியம் மட்டுமே இனி வழங்கப்படும் என முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 80 கோடி ரூபாய் மீதமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியமாக 75 ஆயிரம் ரூபாய் தரப்பட்டு வரும் நிலையில் ஒன்றுக்கு மேற்பட்டமுறை அப்பதவியில் இருந்தவர்கள் 4 லட்சம், 5 லட்சம் என ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அந்தமுறை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.