உக்ரைனின் செர்னோபில்லில் உள்ள அணுமின் நிலையத்திலிருந்து தங்களுக்கு தகவல்கள் வருவது நின்றுவிட்டதாக சர்வதேச அணுசக்தி முகமை கவலை தெரிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து உக்ரைன் மீது, 13-வது நாளாக ரஷ்யா உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் இந்தப் போரால், இருதரப்பிலும் சேதங்கள், உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன. மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படை, அங்குள்ள செர்னோபில் அணுமின் நிலையைப் பகுதியை தனது கட்டுப்பாட்டில் கடந்த வாரம் கொண்டுவந்தது.
எனினும், இங்கு வெளியாகும் கதிர்வீச்சு அளவு குறித்த புள்ளிவிவரங்கள் சர்வதேச அணுசக்தி முகமைக்கு தொடர்ந்து தகவல்கள் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக செர்னோபில்லில் இருந்து தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. அணுமின் நிலைய ஊழியர்கள் ரஷ்ய ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு என்ன நிலை என்பது தெரியாதது, கவலை தருவதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.
அணுமின் நிலையத்தை சரியாக பராமரிக்காவிட்டால் கதிர்வீச்சு அதிகரித்து மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. செர்னோபில் அணுமின் நிலையத்தில் கடந்த 1986-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் அதிளவு கதிர்வீச்சு வெளியானதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். மேலும் கதிர்வீச்சு பரவியதால் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்பட்டன.