உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்யப் படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில் மும்முரமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. தங்கள் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என நோட்டோ அமைப்பிடம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்தார்.
நேட்டோ அமைப்பு அந்த கோரிக்கைகளை ஏற்று உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத்தடை என அறிவித்தால், பயணிகள் விமானம், சரக்கு விமானம், என எந்த வித விமானங்களும் உக்ரைன் வான்பரப்பில் பறக்கக்கூடாது. இது ரஷ்ய போர் விமானங்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க உதவும். ஆனால், உக்ரைன் அதிபர் விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டது. தங்கள் நாட்டின் வான்பரப்பை விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க நேட்டோ மறுப்பு தெரிவித்ததற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விமானப்படையின் பெண்கள் பிரிவினர் இடையே பேசிய புதின்,“உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பவர்கள் ரஷ்யாவுடன் யுத்தத்தில் ஈடுபடுபவர்களாக கருதப்படுவார்கள். தமது பாதுகாப்புப் படையினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் யாரேனும், வான் பரப்பு தடை மேற்கொண்டால் அவர்கள் எந்த அமைப்பில் உறுப்பினராக இருந்தாலும், அப்போதே இந்த ராணுவ யுத்தத்தில் பங்கேற்பவர்கள் ஆக கருதப்படுவார்கள். அதற்கான விளைவையும் சந்திப்பார்கள்’’ என்றார்.