நிர்வாகத் திறமையும், அதிரடித் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றும் வல்லமையும், உதவும் குணமும், எதிரிக்கும் நல்லது செய்யும் மனோ பாவமும் கொண்ட நீங்கள், எங்கும் எப்போதும் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் வல்லவர். உங்களுக்கு 21.03.2022 முதல் 08.10.2023 வரையிலும் ராகுவும், கேதுவும் இணைந்து என்ன பலன்களைத் தரப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை முடக்கிப்போட்ட ராகு பகவான் இப்போது ஒன்பதாம் வீட்டில் வந்து அமர்கிறார். ஆகவே பல காரியங்களை முழுமூச்சுடன் செய்து முடிப்பீர்கள்.
சோம்பல் நீங்கும். முடியாமல் கிடப்பில் கிடந்த பல காரியங்களை இனி முழுமூச்சுடன் முடித்துக்காட்டுவீர்கள். ஒளிந்து மறைந்து வாழ்ந்த வாழ்க்கை இனி பிரகாசிக்கும். என்னதான் கடினமாக உழைத்தும் கையில் ஒரு காசு கூட தங்கவில்லையே என வருந்தினீர்களே… இனி அந்த நிலை மாறும்; கையில் காசு-பணம் சேரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். உங்களின் ஆலோசனையின்றி எதுவும் செய்யமாட்டார்கள்.
இதுவரையிலும் இருந்துவந்த தடைகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் சுபகாரியங்கள் கூடிவரும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி காண்பீர்கள். கணவன் – மனைவிக்குள் நிலவிவந்த பனிப்போர் மறையும்; அந்நியோன்யம் பிறக்கும். வசதி – வாய்ப்புகள் ஆயிரம் இருந்தும் வாரிசு இல்லையே என வருந்திய அன்பர்களுக்குப் பிள்ளை வரம் கிடைக்கும். குலதெய்வ கோயிலுக்குக் குடும்பத்துடன் போய் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள்.
ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
21.03.2022 முதல் 22.05.2022 வரை: சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் ராகு செல்வதால், பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய பிரச்னைக்குத் தீர்வு கிட்டும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வருமானம் உயரும்.
23.05.2022 முதல் 29.01.2023 வரை: சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் ராகு செல்வதால் வீடு, வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் ஆரோக்யம் கூடும்.
30.01.2023 முதல் 08.10.2023 வரை: கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் ராகு செல்வதால் மனக் கவலைகள், திடீர் செலவுகள் வந்து செல்லும்.
வியாபாரத்தில்: போட்டிகள் தளரும். தொழில் நுணுக்கங்களை அறிந்து பேசுவீர்கள். புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கை யாளர்களை இழுப்பீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். அனுபவமிகுந்த வேலையாட்கள் வந்துசேருவார்கள். ஏற்றுமதி இறக்குமதி வகைகள், உணவு, இரும்பு, கணினி உதிரி பாகங்கள், மருந்துப் பொருட்களால் லாபம் அதிகரிக்கும். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.
உத்தியோகம்: 10-ம் வீட்டில் இருந்தபடி உத்தியோகத்தில் வேலைச் சுமையையும் வீண்பழியையும் கொடுத்துவந்த ராகு இப்போது 9-ல் நுழைகிறார். அவதிப்பட்ட நிலை மாறும். அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு உண்டு. சிலருக்கு தகுதிக்கேற்ற நல்ல புதிய உத்தியோகம் அமையவும் வாய்ப்பு உண்டு. கலைத்துறையினர்களின் படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பேசப்படும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்துகொண்டு நிம்மதியாக தூங்கவிடாமல் அலைக்கழித்தார் கேது. இனி, 3-ம் வீட்டில் அமரப்போகிறார். ஆகவே, குடும்பத்தில் சந்தோஷம் கரை புரளும். சங்கடங்கள் தீரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சந்தேகப்பட்டுக் கொண்டீர்களே! இனி நெருக்கம் அதிகரிக்கும். சோம்பலாக இருந்த பிள்ளைகள் இனி சுறுசுறுப்பு அடைவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள்.
தாயாருடனான மனக்கசப்பு நீங்கும். ஆனால் இளைய சகோதரர் வகையில் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து மறையும். கொஞ்சம் விட்டுக்கொடுத்து போங்களேன். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் கவனமாகக் கையாளுங்கள்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்!
21.03.2022 முதல் 24.09.2022 வரை: குருவின் விசாகம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்குப் புது வேலை கிட்டும். அயல்நாட்டுப் பயணங்கள் வரும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
25.09.2022 முதல் 04.06.2023 வரை: ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது செல்வதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வீண் விமர்சனங்களைத் தவிர்க்கப் பாருங்கள். நண்பர்கள் சிலரின் துரோகங்களை நினைத்து வருந்துவீர்கள்.
4.06.2023 முதல் 08.10.2023 வரை: செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் கேது செல்வதால், எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய கடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.
வியாபாரத்தில்: முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் வந்தமையும். சக ஊழியர்களுடன் பகை நீங்கி நட்புறவாடுவீர்கள். கணினித் துறையினருக்கு அதிக சம்பளத்துடன், புதிய வாய்ப்புகள் தேடி வரும்.