தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது (TANSIM) பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆரம்பகட்ட ஆதார நிதி (TANSEED)வழங்க திட்டமிட்டது. அதன் அடிப்படையில் இதுவரை இரண்டு முறை இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஏற்கெனவே 19 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நிறுவனங்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில் மூன்றாம் கட்டமாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான ஆரம்பகட்ட ஆதார நிதியை பெற விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
தமிழ்நாடு உலக அளவில் முதலீட்டு ஈர்ப்பு மையமாகவும், புத்தொழில் தொடங்குவதற்கு ஏற்ற களமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த புத்தாக்க இயக்கத்தின் அடிப்படை நோக்கம். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து, அவை தொடங்குவதற்கான பாதையை அமைத்து தருகின்றன. புத்தொழில் நிறுவனங்கள் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு வளர்ச்சியை நோக்கி நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்ல இந்த நிதி பெரிதும் உதவியாக இருக்கும்.
சிறு விவசாயிகளின் வணிகங்களை மேம்படுத்தும் வேளாண் நிறுவனங்கள், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அபாயத்தைத் குறைக்க செயல்படும் புதுமையான மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் செயல்படும் நிறுவனங்கள், கலை, கைவினை, கால்நடைகள் என கிராமப்புற சிறுதொழில்முனைவோருக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் என இந்த மூன்று தொழில்களை தழுவி செயல்படும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த நடுவர்குழு மூலம் இத்தகைய நிறுவனங்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆரம்பகட்ட ஆதார நிதியாக தமிழக அரசின் சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிதியைப் பெற விரும்பும் நிறுவனங்கள் www./startuptn.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளாக மார்ச் 11-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதில் பங்கு கொண்டு நிதி உதவியைப் பெறலாமே!