திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முதல்முறையாக தன் வாழ்க்கை வரலாற்றை `உங்களில் ஒருவன்’ எனும் தலைப்பில் தானே புத்தகமாக எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தின் பின்பக்க அட்டையில், `சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் பேரறிஞர் அண்ணா, இயக்கத்தை வழி நடத்துவதில் தமிழினத் தலைவர் கலைஞர், மொழி உரிமையில் இனமானப் பேராசிரியர். இந்த நால்வரின் நிழற்குடையில் நிற்பவன் நான். இவர்கள்தான் என்னைச் செதுக்கியவர்கள்’ என ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழாவானது சென்னை வர்த்தக மைய வளாகத்தில் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது.
தி.மு.க பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் தலைமையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், தி.மு.க எம்.பி கனிமொழி, டி.ஆர். பாலு, கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மேலும், தி.மு.க அமைச்சர்கள், ஸ்டாலின் குடும்பத்தினர் மற்றும் கட்சித் தொண்டர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் வாழ்த்துரை வழங்கினார். அப்போது பேசிய அவர், “இங்கு அனைவரும் அண்ணன் தம்பிகளே. நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்காக சிங்கம் போல கர்ஜித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி. திராவிட இயக்க வழக்கப்படி ராகுலை நான் தம்பி என்றும், முதல்வர் ஸ்டாலினை அண்ணன் என்றும் அழைக்கிறேன். முதல்வர் பினராயி என்பதை விட, தோழர் பினராயி என்றே அழைக்கலாம். இயற்கையாகவே நாம் அனைவரும் ஹோமோ சேப்பியன்ஸ், நாம் மனிதர்களாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு மனிதாபிமானம் தேவை. தன்னுடைய வாழ்நாளில் யார் ஒருவர் பெரியாரின் சமூகநீதி புத்தகத்தையும், காரல் மார்க்ஸின் பொருளாதாரக் கொள்கை புத்தகத்தையும் படிக்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான ஹீரோஸ். ரஷ்ய தலைவர் ஸ்டாலினும் இரும்பு மனிதர், முதல்வர் ஸ்டாலினும் இரும்பு மனிதர். ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் கிரிக்கெட் வீரர் எனக் கேள்விப்பட்டேன். அடுத்த தேர்தலில் சிக்சர், பவுண்டரிகளாக அடிக்க வேண்டும்” என பேசினார்.