அருணாச்சலப் பிரதேசத்தில் வேட்டைக்குச் சென்ற சமயத்தில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்திடம் (PLA) பிடிபட்ட மிரம் டாரோன் என்ற 17 வயது சிறுவன் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டு தன் குடும்பத்துடன் இணைந்திருக்கிறார். அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் இந்திய – சீன எல்லையில் வேட்டைக்குச் சென்றிருந்தபோது சீன இராணுவத்திடம் பிடிபட்டார். இந்தச் சிறுவன் சீன இராணுவத்தின் பிடியிலிருந்த சமயத்தில் அவர்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக `இந்தியா டுடே’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சிறுவன் மிரம் டாரோன், “நான் பிடிபட்டபின் என் கைகளைக் கட்டினார்கள். முகத்தையும் ஒரு துணியால் மூடி விட்டார்கள். என்னுடைய கைகளைக் கட்டி காட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். பின்னர், என்னைச் சீன இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். முதல் நாளில் சித்ரவதை செய்தார்கள். எனக்கு எலெக்ட்ரிக் ஷாக் வைத்தார்கள். இரண்டாம் நாளிலிருந்து எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு போதுமான தண்ணீரும் உணவும் கிடைத்தது” எனக் கூறியிருக்கிறார்.
Also Read: அருணாச்சலப் பிரதேசம்: வழிதவறி சீன எல்லைக்குள் நுழைந்த சிறுவன் – இந்திய ராணுவம் தகவல்!
ஜனவரி 18-ல் மிரம் பிடிபட்டிருந்தாலும் ஜனவரி 19-ம் தேதி அருணாச்சலப் பிரதேச மக்களவை எம்.பி-யான தபீர் காவ் இந்தச் சம்பவம் குறித்துத் தெரிவித்த பின்னர் மிரம் காணாமல் போன விஷயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதையடுத்து, இந்திய இராணுவம் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஜனவரி 27 -ம் தேதி மிரம் விடுவிக்கப்பட்டார். உடல்நிலை சோதனைகள் மற்றும் சில சட்ட நடைமுறைகளால் தற்போது கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்பு தன் குடும்பத்துடன் இணைந்திருக்கிறார். அவருக்கு ஜிடோ(Zido) கிராம மக்கள் பலத்த வரவேற்பளித்தனர்.
தன்னுடைய மகனின் தற்போதைய நிலை குறித்துக் கூறும் மிரமின் தந்தை ஒபாங் தரோன், “என் மகனை மிகவும் துன்புறுத்தியுள்ளார்கள். அவன் பிடிபட்டதும் அவனிடம் திபெத்தியனில் பேசி இருக்கிறார்கள். அவன் அது புரியாமல் இந்தியிலும், எங்கள் தாய்மொழியான ஆதியிலும்(Adi) பேசி இருக்கிறான். அது அவர்களுக்குப் புரியாததால் அவனை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார்கள். அவனை உதைத்திருக்கிறார்கள். நாங்கள் இந்திய இராணுவத்திடம் பேசியிருக்கிறோம். என் மகனின் சிகிச்சைக்கு உதவுவதாகக் கூறியிருக்கிறார்கள்” என்றார்.
Also Read: அருணாச்சலப்பிரதேசம்: வேட்டையாடச் சென்ற சிறுவன்; கடத்திய சீன ராணுவம்?! – என்ன நடந்தது?