ஒமைக்ரான் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை முன்னிட்டு, 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் ஷர்மா அளித்த மனுவை விசாரிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்தியாவில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி துவங்கி, மார்ச் 7-ம் தேதி வரை உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில், சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கொரோனா வழிமுறைகளுடன் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா திரிபு வேகமாகப் பரவி வருவதால், மூன்றாவது அலையை மேற்கோள் காட்டி, 5 மாநில தேர்தல்களையும் ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் ஷர்மா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

மேலும், கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது அலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை விநியோகிப்பதற்கான திட்டத்தை சமர்ப்பிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் மனுவில், அவர் வலியுறுத்தி இருந்தார். அதனுடன், கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் எளிதில் கிடைப்பது மற்றும் விநியோகம் செய்வதற்கான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு, அரசாங்கங்களுக்கு உத்தரவிடவும், 5 மாநிலங்களிலும் தேர்தலை சில வாரங்கள் அல்லது மாதங்களுக்கு ஒத்திவைக்க தேர்தல் ஆணையத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குமாறும் ஜெகதீஷ் ஷர்மா மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

image

கடந்த ஆண்டு கொரோனா இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட பேரழிவை ஜெகதீஷ் ஷர்மா மேற்கோள் காட்டியதுடன், நாட்டில் வைரஸ் வேகமாக பரவியதால் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏராளமான மக்கள் தங்கள் உயிரை இழந்தனர். வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள குறைபாடுகளையும் மனுவில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் ஷர்மாவின் மனு மீது அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதிகள், தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால், மனுதாரர் செவ்வாய் கிரகத்தில் வாழ்கிறாரா என்று கேட்டனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ஜஸ்மீத் சிங் அடங்கிய அமர்வு, “இது ஒரு அற்பமான மனு. நீங்கள் என்ன செவ்வாய் கிரகத்தில் வசிக்கிறீர்களா?. டெல்லியில் இப்போது வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நீங்கள் இந்த மனுவை திரும்பப் பெறுங்கள். இல்லையெனில் நாங்கள் அதிக அபாரதத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்வோம்” என்று கூறினர். இதையடுத்து ஜெகதீஷ் ஷர்மா தரப்பு வழக்கறிஞர் மனுவை வாபஸ் பெற்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.