நயினார் நாகேந்திரன் அவர் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டார்; பிரச்னை அத்தோடு முடிந்துவிட்டது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப்பெறும். அதிமுக அதிக இடங்களை வெல்லும்.
உள்ளாட்சித்தேர்தலில் இடங்களை ஒதுக்குவதில் அனைத்து கட்சிகளுக்குள்ளும் பிரச்னை இருக்கும். நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் அதிமுக அதிக இடங்களில் போட்டியிட்டு, பெரும்பான்மையான இடங்களை வெல்லும். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே, தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படுகிறது” என்றார்.
நயினார் நாகேந்திரன் அதிமுக குறித்து விமர்சனம் செய்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தனது பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவித்துவிட்டார்; பிரச்னை நிறைவடைந்துவிட்டது. தவறு செய்யாதவர்களே கிடையாது, செய்த தவறை எண்ணி வருத்தம் தெரிவித்தால் அதனை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் இருக்க வேண்டும். அது எங்களுக்கு இருக்கிறது” என்றார்.