தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால், தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு கூடிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் வார்டு பங்கீடு, வேட்பாளர் தேர்வு என படு பிஸியாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ஆளும் திமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மிகப் பெரிய அளவில் வெற்றியைப் பதிவு செய்திட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. வார்டு பங்கீட்டில் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
நேற்றைய தினம் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் சார்பில் தி.மு.க-வுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ம.தி.மு.க-வினருக்கு 5 வார்டுகளுக்கும் குறைவாகவே ஒதுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி ம.தி.மு.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையிலிருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவரின் மகன் துரை வைகோ தலைமையில் இன்று மதியம் 4 மணிக்குத் தாயகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, “இதுவரை 7 மாவட்டங்களுக்கான வார்டு பங்கீடு சுமுகமாகப் பேசி முடிக்கப்பட்டிருக்கிறது. சில மாவட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மகளிருக்குப் பாதிக்குப் பாதி வார்டுகள் ஒதுக்கப்பட்டிருப்பதால், இந்த புதிய சூழலை சமாளிக்கச் சிறிது காலம் எடுக்கும். முதல்வர் தாயுள்ளத்தோடுதான் வார்டு பங்கீடு செய்திருக்கிறார். 4-ம் தேதிக்குள் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் மதவாத சக்திகள் வேரூன்ற விடக்கூடாது என்பதில் உறுதியோடு இருக்கிறோம். எனவே எங்களின் தி.மு.க-வுடனான கூட்டணி தொடரும். முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம்” என்றார்.
Also Read: `வைகோ vs வெங்கைய நாயுடு!’ பரபரத்த மாநிலங்களவை – நடந்தது என்ன..?