தமிழகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட தனியார் மற்றும் அரசு கட்டடங்கள் தொடர்பாக பல்வேறு பொதுநல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து பல்வேறு ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வந்தன.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு கடந்த மாதம் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், `தமிழகம் முழுவதும் 47,707 ஏக்கர் பரப்பளவில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. 4,862 அரசுக் கட்டடங்களும் நீர்நிலைகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கின்றன’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை அளவீடு செய்வதற்கு ஒரு வருடம் கால அவகாசம் தேவைப்படும் என்றும், தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டத்தின்படி மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, அனைத்து நீர்நிலைகளையும் அந்த சட்டத்தின்கீழ் கொண்டுவர புதிய சட்ட முன்வடிவும் கொண்டுவரப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அனைத்து நீர்நிலைகளின் புள்ளிவிவரங்களை, தமிழகத்தில் உள்ள 313 தாலுகாக்கள் வாரியாக தமிழ்நிலம் என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்கள். இந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கானது கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.
Also Read: நீர்நிலை ஆக்கிரமிப்பு: “சும்மா உட்காரவா ஊதியம்?” – அதிகாரிகளை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்
அந்த தீர்ப்பில், “இனி எந்த நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்படும் நிலங்களுக்குத் திட்ட அனுமதி வழங்கக்கூடாது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்படும் நிலங்களைப் பத்திரப்பதிவுத்துறை பதிவு செய்யக்கூடாது. அந்த நிலங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகள் வழங்கக்கூடாது. ஆக்கிரமிப்பு உள்ள இடங்களுக்கு மின் கட்டணம், குடிநீர் வரி, சொத்து வரி போன்றவை வசூலிக்கப்படக் கூடாது” என்றும் கூறப்பட்டது.
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு இல்லை என்ற உத்தரவாதம் பெற்ற பிறகே நிலத்துக்குக் கட்டட அனுமதியோ, ஒப்புதலோ வழங்கவேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்
மேலும், “ பத்திரப்பதிவு, திட்ட அனுமதி, மின் இணைப்பு வழங்குவதற்கு முன்பாக அந்த இடம் நீர்நிலை ஆக்கிரமிப்பு இல்லை என்பதை அந்த துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தவேண்டும். அப்படி விதிகளை மீறிச் செயல்படும் அதிகாரிகளின் மீது துறைசார் நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவந்தால், எந்த காலதாமதமும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். அந்த நிலங்களை நீர்நிலை பகுதி என்று அறிவித்து அதை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்” என்று தீர்ப்பளித்தனர்.
Also Read: “நீர்நிலைகளை டெண்டர் விடுவதில் ஊழல்கள்தான் நடந்தேறுகின்றன!’’ – அறப்போர் இயக்கம்