மயிலாடுதுறை அருகே ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்பட்டதைக் கண்டித்து, அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து, அரிசியை சாலையில் கொட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சில ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்திலுள்ள காலனி தெரு ரேஷன் கடையில் 800-க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு அரசு அறிவித்த பொங்கல் பரிசுத்தொகுப்பு தரமற்ற முறையில் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தனர். இது தொடர்பாக வட்ட வழங்கல்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்துபோது, “பொங்கலுக்குப் பிறகு தரமான அரிசி வழங்கப்படும்” என அதிகாரிகள் உறுதி அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தொடர்ச்சியாக தரமற்ற அரிசி பொங்கல் முடிந்த பிறகும் வழங்கப்பட்டதால் ரேஷன் கடைக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை மறித்து பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். ரேஷன் கடையில் வழங்கப்பட்ட புழு, பூச்சிகள் நிறைந்த தரமற்ற அரிசி மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருள்களை பொதுமக்கள் சாலையில் கொட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“எதற்கும் பயன்படுத்த முடியாத தரமற்ற ரேஷன் பொருள்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக தரமான அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்க வேண்டும்” என பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து வந்த மணல்மேடு காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். “விரைவில் தரமான அரிசி மற்றும் பொருள்கள் வழங்கப்படும்” என அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டனர்.
Also Read: மயிலாடுதுறை: தரமற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு – பொதுமக்கள் சாலைமறியல்!