தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 7 இடங்களில் அகழ்வாய்வு நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தொல்லியல் அகழாய்வுகள் சங்ககால கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி அகழ்வாய்வு செய்யத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கீழடி அகழாய்வு மற்ற அகழாய்வுகளுக்கு முன்னோடி அகழாய்வாகத் திகழ்கிறது. இதுவரை கங்கை சமவெளியில் கி.மு 6-ம் நூற்றாண்டிலிருந்து நகரமயமாக்கம் இல்லையென்றும், பிராமி எழுத்து மௌரியர் தோற்றுவித்தது என்றும் கருதுகோள்கள் இருந்தன. அத்தகைய கருதுகோள்களுக்கு அறிவியல்பூர்வமாக விடை அளித்துள்ளது கீழடி அகழாய்வு. தமிழ்நாட்டில் கி.மு ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல் படிப்பறிவும் எழுத்தறிவு பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது. எனவே, வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக் காலம் வரை தொல்லியல் இடங்களில் அகழாய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பண்டைத் தமிழர் சமூகத்தின் பண்பாட்டு, விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அகழ்வாய்வு நடத்தப்படும்.
விருதுநகர், திருநெல்வேலி துலுக்கர் பட்டி, தருமபுரி பெரும் பாலையில் முதற்கட்ட ஆய்வு நடத்தப்படும். சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, மணலூரில் எட்டாம் கட்ட தொல்லியல் ஆய்வு நடத்தப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் சிவகலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு நடத்தப்படும். அதேபோல, அரியலூர் கங்கை கொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். சங்ககால கொற்கை துறைமுகத்தின் தொல்லியல் வளத்தைக் கண்டறியக் கடலோரங்களில் ஆய்வு நடத்தப்படும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Also Read: கொற்கை அகழாய்வு: 9 அடுக்கு செங்கல் கட்டுமானத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட 2 அடுக்கு கொள்கலன்!