தமிழக அரசு, நியாய விலை கடைகள் மூலம், பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கரும்பும் இடம்பெறுகிறது. இதற்கான கரும்புகளை கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்களின் தலையீட்டால் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தார்கள். தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுமை விகடன் இணையதள செய்தி மூலம் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தார்கள். இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து நேரடியாகவே பொங்கல் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Also Read: பொங்கல் கரும்பு கொள்முதலில் முறைகேடு; இடைத்தரகர்களால் பாதிக்கப்படும் விவசாயிகள்; கவனிக்குமா அரசு?
தமிழக மக்கள், பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில், 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருள்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்படுகிறது. இதோடு பொங்கல் கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதனால் பொங்கல் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். லாபகரமான விலை கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும் இருந்தார்கள். ஒரு கரும்புக்கு 33 ரூபாய் விலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக இடைத்தரகர்கள் மூலம் பொங்கல் கரும்பு கொள்முதல் செய்யப்படுவதாகவும், இதனால் ஒரு கரும்புக்கு அதிகபட்சம் 13 ரூபாய் மட்டுமே விலை வழங்கப்படுவதாக விவசாயிகள் ஆதங்கப்பட்டார்கள்.
Also Read: “கடனை கட்டிட்டு வேணா செத்துப் போங்க!” – விவசாயியை அதிரவைத்த தனியார் ஊழியரின் உரையாடல்
இதுகுறித்து பசுமை விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்த நிலையில்தான், ரேசனில் பொங்கலுக்கான கரும்பினை, தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்படும் எனவும் கரும்பின் உயரம் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும், நோய்த்தாக்குதல் இல்லாமலும் இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளார்கள். அதேசமயம், இந்த அறிவிப்புக்கு பிறகும் கூட ஏதேனும் புதிய வழிகளில் இடைத்தரகர்களை உள்ளே நுழைந்துடக்கூடாது எனவும் அரசு அதிகாரிகள் இதில் நேர்மையுடன் செயல்பட வேண்டும் எனவும் எச்சரிக்கை செய்கிறார்கள்.