மத்திய மாநில அரசுகள் கடந்த காலங்களில் ரசாயன விவசாயத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்தன. குறிப்பாக, இயற்கை விவசாயத்துக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்து வந்தார்கள். இன்னும் சொல்லப் போனால் இயற்கை விவசாயம் என்ற சொல்லைக் கேட்டாலே, நமது ஆட்சியாளர்களுக்கு வேப்பங்காயாகக் கசந்து வந்தது. இந்நிலையில்தான் இன்று குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய இயற்கை விவசாய மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வது நாடு முழுவதும் உள்ள இயற்கை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அளவுக்கு மாற்றம் வருவதற்கு பசுமை விகடனின் பங்களிப்பும் ஒரு முக்கியமான காரணம் என விவசாயிகள் மிகுந்த நெகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்கள். குறிப்பாக, இம்மாநாட்டில் சுபாஷ் பாலேக்கரின் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பம் குறித்த வழிகாட்டுதல்கள் முதன்மையாக இடம் பெறுகின்றன.

குஜராத் மாநாடு தொடர்பான விளம்பரம்

Also Read: ̀ஜீரோ பட்ஜெட்’ வேளாண்மை; போலி நாடகம் வேண்டாம் பிரதமரே!’ – கொதிக்கும் சுபாஷ் பாலேக்கர்

இவரது இயற்கை வேளாண் வழிகாட்டுதல்களை விவசாயிகளிடம் பரவலாகக் கொண்டு சென்றதில் பசுமை விகடன் மிக முக்கியமான பங்காற்றியுள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு இவர் அறிமுகமாகாத காலகட்டத்தில், இவரை நேரில் சந்தித்து ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்களை பசுமை விகடன் கட்டுரைகள் மூலமாக, இங்குள்ள விவசாயிகளிடம் அறிமுகம் செய்த எழுத்தாளர் தூரன்நம்பி மிகவும் நெகிழ்ச்சியோடு தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

“நம்ம ஆட்சியாளர்களோட பார்வை இன்னைக்கு இயற்கை விவசாயத்தை நோக்கி திரும்பியிருக்குன்னா, இதுக்கு பசுமை விகடனும் ஒரு முக்கிய காரணம் என்பது யாராலயும் மறுக்க முடியாத யதார்த்தம்.

நானும் ஒரு விவசாயிதான். சேலம் மாவட்டம் புவனகிரியில எனக்கு நிலம் இருக்கு. ரசாயன உரங்களால் செலவு அதிகமானதோடு, விளைச்சல் குறைஞ்சிக்கிட்டே வந்துச்சு. விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கததுனாலயும், உழைப்புக்கேத்த லாபம் கிடைக்கலை. பல சமயங்கள்ல நஷ்டமும் ஏற்பட்டுச்சு. இதனால் விரக்தி அடைஞ்சு, 1980-களோட துவக்கத்துலயே விவசாயத்தை விட்டு வெளியேறிட்டேன். 1996-ம் வருஷம் கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் நஞ்சுண்ட சாமிகிட்ட விவசாயிகளோட நிலைமையைப் பத்தி நொந்து போயி பேசிக்கிட்டு இருந்தேன். “உற்பத்தி செலவுகளைக் குறைச்சாதான், விவசாய விளைபொருள்கள்ல லாபம் பார்க்க முடியும்… சுபாஷ் பாலேக்கருனு ஒருத்தர் இதுக்கான தொழில்நுட்பங்களை சொல்லிக் கொடுக்குறாரு”னு சொன்னார். ஆனாலும், எனக்கு அதுல நம்பிக்கை ஏற்படாததுனால, அவரை போயி சந்திக்கலை.

தூரன்நம்பி

2007-ம் வருஷம் பசுமை விகடன் தொடங்கப்பட்டப்பதான், கர்நாடகவுல அவரோட பயிற்சி வகுப்புல கலந்துகிட்டேன், ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்கக்கூடிய சில விவசாயிகள் கர்நாடகாவுல இருந்தாங்க. அவங்க அனுபவங்களை, பசுமை விகடன்ல கட்டுரையாக வெளியிடப்பட்டது. பசுமை விகடன் ஏற்பாட்டில், தமிழ்நாட்டுல முதல்முறையா திண்டுக்கல்ல நான்கு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஈரோடு உள்ளிட்ட இன்னும் பல பகுதிகள்ல ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதுல கலந்துகிட்ட விவசாயிகள்ல பெரும்பாலானவங்க, ஜீரோ பட்ஜெட் தொழிநுட்பங்களைக் கடைப்பிடிச்சு, இயற்கை விவசாயத்துல ஈடுபட ஆரம்பிச்சாங்க. அவங்களோட வெற்றிக்கதைகளும் பசுமை விகடன்ல தொடர்ச்சியாக வெளியாகிக்கிட்டே இருந்துச்சு. கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்கள்ல உள்ள விவசாயிகளும் பசுமை விகடனைப் பார்த்துட்டு ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பிச்சாங்க. இதுக்கிடையிலல் நம்மாழ்வாரோட இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களையும் பசுமை விகடன் பரவலாகக் கொண்டு போயிக்கிட்டே இருந்துச்சு. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாமல், கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் துறைகள்ல வேலைபார்க்கும் இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பல தரப்பினருக்கும் இயற்கை விவசாயத்து மேல தாக்கம் அதிமாகிக்கிட்டே இருந்துச்சு. சில விவசாயிகளின் வயல் வெளிகள்ல மட்டுமே இருந்துகிட்டு இருந்த, இயற்கை விவசாயத்தை, உலகம் முழுக்க கொண்டு போயி சேர்த்த பெருமை, பசுமை விகடனைத்தான் சேரும்’’ என உணர்வுபூர்வமாகத் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், “இயற்கை விவசாயத்தைப் பத்தின கட்டுரை வெளியிடுவது, பயிற்சி வகுப்புகள் நடத்துறதோடு மட்டும் பசுமை விகடன் தன்னோட கடமையை நிறுத்திக்கலை. இதன் அவசியத்தை, மத்திய அரசுக்கு உணர்த்திய மிகப்பெரிய பணியையும் பசுமை விகடன் செஞ்சிருக்கு. 2020-21-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை முன் தயாரிப்பு மத்திய அரசு ஈடுபட்டுருந்த நேரம் அது.

சுந்தர. விமல்நாதன்

விவசாயிகளுக்கு உண்மையாகப் பயன் அளிக்கக்கூடிய அம்சங்கள் அதுல இடம்பெறணும்ங்கற அக்கறையோடு பசுமை விகடன், இங்கவுள்ள விவசாயிகளோட கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது. அதை ஒரு ஆவணமாகத் தயார் செஞ்சு, 2020 ஜனவரி மாசம், பசுமை விகடன் முன்னெடுப்புல. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, விவசாயிகள், பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவினர் சந்திச்சோம். `விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான லாபகரமான விலை கொடுக்கலைன்னாலும்கூட பரவாயில்லை. உற்பத்திச் செலவை குறைக்கிறதுக்காகவாவது மத்திய அரசு விவசாயிகளுக்கு உறுதுணையா இருக்கணும். இதுக்கு இயற்கை விவசாயம்தான் சிறந்த வழி. இதை நாடு முழுக்க நடைமுறைப்படுத்த சிறப்பு திட்டங்களை வகுக்கணும் என வலியுறுத்தினோம். மத்திய அரசாங்கத்தோட பார்வை இயற்கை விவசாயத்தை நோக்கியும் திரும்பியிருக்குன்னா அதுக்கு பசுமை விகடன் அச்சாணியாக இருந்திருக்கு’’ எனத் தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.