திருமலை அன்னமய்ய பவனில் நடைபெற்ற அறங்காவலர் குழுக் கூட்டத்தில், சில முக்கிய முடிவுகளும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தானத்தின் அறங்காவலர்குழுத் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, ‘‘திருமலையில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியின்போது, இரண்டு நாள்கள் மட்டுமே வைகுண்ட வாசல் என்னும் சொர்க்கவாசல் திறந்துவைக்கப்படும்.
பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த முறை ஜனவரி மாதம் 13-ம் தேதி முதல் 10 நாள்களுக்கு சொர்க்கவாசலைத் திறந்துவைக்க முடிவு செய்துள்ளோம். சொர்க்கவாசல் வழியாகச் சென்று வர 10 நாள்களுக்கும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எஸ்.சி., எஸ்.டி., பி.சி, மீனவ சமூகத்தினர் இலவசமாக வைகுந்த தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள்.
இதனிடையே, கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், புத்தாண்டில் எத்தனை ஆயிரம் பக்தர்களைக் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கலாம் என்பது குறித்தும் மத்திய, மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுத முடிவெடுத்துள்ளோம். அன்னமய்ய நடைப்பாதையை வேறு வழியில் உருவாக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மழையால் சேதமடைந்த இரண்டாவது மலைப்பாதையை சீரமைக்க 3.95 கோடி ரூபாயும், ஸ்ரீவாரிமெட்டு நடைப்பாதையை சீரமைக்க 3.6 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளோம். மேலும், 3 கோடி ரூபாய் செலவில் திருப்பதியில் உள்ள வாடகை அறையில் வாட்டர் ஹீட்டர்கள் பொருத்தப்படும். பக்தர்களுக்கு மொட்டையடிக்கும் சவரத் தொழிலாளர்களுக்கு, ஒரு மொட்டைக்கு 11 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக உயர்த்தப்படுகிறது’’ என்றார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த அறங்காவலர் குழு உறுப்பினரும், அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமார், ‘‘ஏழுமலையான் கோயிலுக்குத் தமிழகத்திலிருந்துதான் 50 சதவிகித பக்தர்கள் வருகிறார்கள். அவர்களில், நடைப்பாதையில் வரும் தமிழக பக்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை’’ என்பதை சுட்டிக்காட்டினார். ‘‘ஏ.பி.நந்தகுமாரின் கருத்தினைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு தமிழக பக்தர்களின் குறைகள் தீர்க்கப்படும்’’ எனவும் நிர்வாகக் குழு தெரிவித்தது.