கமலின் ‘விக்ரம்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது. இன்னும் சில தினங்களுக்கு பிறகு கமல் பங்கேற்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு இந்த வருட தொடக்கத்தில் சென்னையில் தொடங்கி, தொடர்ந்து பாண்டிச்சேரி, கோவை என பல கட்ட படப்பிடிப்புகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து இன்று இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் ஆரம்பித்திருக்கிறது. இதன் ஷூட்டிங் ஒரே ஷெட்யூலாக அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிவரை இரவும் பகலுமாக இடைவிடாமல் தொடர்ந்து நடந்து நிறைவடைய உள்ளது என்கிறார்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னரே இறுதி கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்க வேண்டும். சிலபல காரணங்களால் தள்ளிப் போன படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. இன்று தொடங்கிய படப்பிடிப்பில் கமல் பங்கேற்கவில்லையாம். இன்னும் சில தினங்களுக்குப் பிறகு அவர் பங்கேற்பார் என்கிறார்கள். விக்ரமில் பஹத் பாசில், விஜய்சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ், நரேன், ஷிவானி நாராயண், அந்தோணி வர்கீஸ், ஹரீஷ் பெராடி, சம்பத்ராம் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். கமல் வரும் வரை, இதர நடிகர்களின் போர்ஷன்கள் படமாக்கப் பட உள்ளதாம்.