நடிகை தீபிகா படுகோனே, அவர் கணவர் ரன்வீர் சிங் ஆகியோர் நடித்திருக்கும் ’83’ என்ற படம், வரும் 24ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. கபில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்றதை மையமாக வைத்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் ரன்வீர் சிங், கபில்தேவ் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை தீபிகா படுகோனே, கபீர் கான், சாஜித் நாடியாவாலா, மது வர்மா, விஷ்னுவர்தன் இந்தூரி ஆகியோர் சேர்ந்து தயாரித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்காக வளைகுடா நாட்டைச் சேர்ந்த பைனான்சியர் ஒருவர் ரூ.16 கோடி முதலீடு செய்தார். விப்ரி மீடியாவுடன் வளைகுடா பைனான்சியர் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
அவர் முதலீடு செய்த பணத்துக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்று உத்தரவாதம் கொடுக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் விப்ரி மீடியா நிறுவனம் இந்தப் படத்துக்காக கபீர் கான், சாஜித் நாடியாவாலா, தீபிகா படுகோனே போன்றோருடன் பல தரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்பு, படத்துக்கு பைனான்ஸ் செய்தவரிடம் ஒப்புதல் பெறவில்லை என்றும், இதனால் தான் கொடுத்த பணத்துக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை என்றும் கூறி படத்தின் தயாரிப்பாளர்கள் தீபிகா படுகோனே உட்பட அனைவர் மீதும் மும்பை நீதிமன்றத்தில் பைனான்சியர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
தன்னிடம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனுவை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த வழக்கறிஞர் ரிஷ்வான் சித்திக் இது குறித்து கூறுகையில், “83 படத் தயாரிப்பாளர்கள் அனைவர் மீதும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. பிரச்னைக்கு தீர்வு காண யாரும் முன் வரவில்லை. எனவே எங்களுக்கு வேறு வழியில்லை என்பதால் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் 24-ம் தேதி திட்டமிட்டபடி ’83’ படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.