டெல்லியில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், போராட்டம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்தது. எனினும், குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்தா கிசான் மோர்சா அமைப்பின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள கருத்துரு குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
விவசாயிகள் போராட்டத்தை திரும்பப்பெற்றால், வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்ற மத்திய அரசின் நிபந்தனை குறித்தும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது குறித்த குழு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.