மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மேட்டூரிலிருந்து அதி அளவு உபரிநீர் வெளியேற்றப்படும் காலங்களிலும், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதும், கரையோர கிராமங்களிலிருக்கும் குளங்கள், மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீரோடு முதலைகள் புகுந்து வந்துவிடுவது வழக்கம். அந்த வகையில், கொள்ளிடம் அருகிலிருக்கும் சோதியக்குடி கிராமத்தின் பாப்பாகுளத்தில் நேற்று (05.12.21) ஞாயிற்றுக்கிழமை காலை குளிக்கச் சென்ற பொதுமக்கள் முதலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மக்கள் நடமாட்டத்தால் முதலை உடனடியாக தண்ணீருக்குள் சென்றுவிட்டது. முதலை கொள்ளிடம் ஆற்று நீரில் அடித்துவரப்பட்டு, வடிகால் வாய்க்கால் வழியாக வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல அருகிலிருக்கும் காளியம்மன் கோயில் குளத்திலும் முதலை தென்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த இரண்டு குளங்களிலும் முதலைகள் நடமாட்டம் இருப்பது குறித்து ஊர்மக்கள் சீர்காழி வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் வனக்காவலர்கள் இன்று சோதியக்குடி கிராமத்துக்குச் சென்று குளங்களில் ஆய்வு செய்தனர். அப்போது, சிறிய அளவிலான முதலை நடமாட்டம் இருப்பதை உறுதிசெய்தனர்.
அதனைத் தொடர்ந்து அதைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். சில மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர், முதலையைத் தூண்டில் போட்டுப் பாதுகாப்பாகப் பிடித்து அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் அமைந்திருக்கும் முதலைப்பண்ணையில் விட்டனர். குளத்திலிருந்து முதலை அப்புறப்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
Also Read: `வீட்டுக்குள் பாம்பா? கூப்பிடுங்க பாண்டியனை!’ – 5,000 பாம்புகளைப் பிடித்த சீர்காழி இளைஞருக்கு விருது